Why do we
need to choose academy for civil services exam?
சிவில் சர்வீஸ் தேர்விற்காக அகாடமியில்
சேர்வது அவசியமா?
கேள்வி:
சிவில் சர்வீஸ் தேர்வு குறித்து ஒரு எதிர்மறையான கருத்துகளைக் கூறி அச்சமூட்டுகிறார்களே… இதுகுறித்து சமுதாய ரீதியாக, பொருளாதார ரீதியாக பின் தங்கியிருக்கும் மாணவ, மாணவியர் எப்படி எதிர்கொள்வது?
பதில்:
சிவில் சர்வீஸ் தேர்வு நிச்சயமாக கடினமான
ஒன்றுதான்.எதனால்
அது கடினமாக இருக்கிறது? முதலாவது, போட்டியாளர்களின் எண்ணிக்கை. அதாவது,
1000 பணியிடங்களுக்கான தேர்வில் சுமார் 8 லட்சம் பேர் கலந்துகொள்கின்றனர். விகிதாச்சார இடைவெளி மிகவும் அதிகம். இரண்டாவது, சிவில் சர்வீஸ் தேர்விற்கான பாடத்திட்டமானது
பூரணத்துவம் நிரம்பியது. அதாவது, அனைத்து விதமான அம்சங்களையும் விரிவாக உள்ளடக்கியதாகும்.
தேர்வெழுதத் தயாராவோரிடையே ’அறிவு’ என்கிற அளவுகோலின்படி சற்று ஏற்ற இறக்கமிருக்கலாம். ஆனாலும், எவ்வளவுதான் திறமைசாலியாகவும்,
புத்திசாலியாகவும் இருந்தாலும், நாள் ஒன்றிற்கு 10 மணி நேரத்திற்கு குறையாமல், உட்கார்ந்து படித்தே ஆக வேண்டும் என்பது கட்டாயம். சிலர் கல்லூரிக்காலத்தில்
மிகவும் ஜாலியாகப் படித்து, யுனிவர்சிட்டி அளவில் உயந்த ரேங்க் பெறுவர். ஆனால், ஒரு சிலர் மிகவும் கஷ்டப்பட்டு படித்தாலும் தேர்வின்போது தோல்வியடைவதுண்டு.
சிவில் சர்வீஸ் தேர்வைப் பொறுத்தவரை ’ஜாலியாக படித்து தேர்வெழுதி வெற்றி பெற்றவர்’ என்று எவரையுமே சுட்டிக்காட்ட முடியாது. இதனாலேயே அது கடினமானது என்றாகிவிடுகிறது.
மூன்றாவதாக, சிவில் சர்வீஸ் தேர்வு முறையானது பிரிலிம்ஸ், மெயின்ஸ், இண்டர்வியூ என மூன்று கட்டங்களைக்கொண்டது. ஒரு ஆயிரம் பணியிடங்களுக்கு
நடைபெறும் முதற்கட்ட ’பிரிலிம்ஸ்’ தேர்வில் உத்தேசமாக 8 லட்சம் பேர் கலந்துகொண்டு தேர்வு எதுகிறார்கள் எனில், அவர்களிலிருந்து 15 ஆயிரம் நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இரண்டாம் கட்டத்தேர்வான ’மெயின்ஸ்’ தேர்வெழுதுவர். பின் அவர்களிலிருந்து சுமார் 2000
நபர்கள் ‘நேர்முகத் தேர்விற்காக’ அழைக்கப்பட்டு,
இறுதியாக அவர்களிலிருந்து
காலிப் பணியிடங்களுக்குத்
தேவைப்படும் 1000 நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒருவேளை மேலே கூறப்பட்ட எந்த ஒரு கட்டத்தில் வெற்றிவாய்ப்பு பறிபோனாலும், அவர்கள் மீண்டும் முதற்கட்டத்திலிருந்தே தொடங்க வேண்டும். அதாவது, மீண்டும் அதே சுமார் 8 லட்சம் போட்டியாளர்களுடன் போட்டியிட வேண்டும். போட்டியாளர்களின்
எண்ணிக்கை அதிகமாக இருத்தல், ஒருவேளை முதல் இருகட்டங்களையும்
கடந்து, நேர்முகத்தேர்வுவரைச் சென்று, வெற்றியை நழுவவிட்டால்,
மீண்டும் அடுத்த முயற்சிக்கு ஓராண்டு காலம் எடுக்க வேண்டியிருப்பது, ஒருவர் எவ்வளவுதான் புத்திசாலியாக இருந்தாலும்கூட, அதிகமான பாடங்களை படிக்கவேண்டியிருப்பதால் ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 10 மணிநேரம் படித்தாக வேண்டிய கட்டாயம் என்னும் மூன்று காரணங்களால் இது சற்று கடினமான தேர்வுதான். இந்த சிவில் சர்வீஸ் தேர்வினை நான் எழுத முடிவெடுத்தபோது என் குடும்பத்தினர்கூட, ‘இதெல்லாம் உனக்கு வேண்டாம்’ என்றுதான் கூறினர். பெரும்பாலும் நிறைய எண்ணிக்கையில் தோல்வியடைந்தவர்களைக் காண்கின்றனர்.
இதுமட்டுமல்லாமல், 22 வயதில் சிவில் சர்வீஸ் தேர்வெழுத வருபவர்கள் தொடர்ந்து போராடி தங்களது 29 ஆவது வயது வரையிலும் 5 முறை தேர்வில் பங்குகொண்டபோதும்,
வெற்றி வாய்ப்பு கிடைக்கப்பெறவில்லை என்றால், அவர்கள் வாழ்க்கைநிலை கேள்விக் கிடமாகி விடுகிறது. ஆனால், மிகப்பெரிய வெற்றிகளை சாதிப்பதற்கு சவால்களை எதிர்கொண்டுதானே ஆக வேண்டும்? உள்ளூரில் இருக்கும் சிறுசிறு குன்றுகளில், மலைகளில் எளிதாக ஏறியிருக்கலாம்.
ஆனால், எவெரெஸ்ட் சிகரத்தில் கால்பதிக்க வேண்டுமெனில், அதற்கேற்ற நடைமுறைகளைப் பின்பற்றுவதுடன்,
ஆபத்துகளையும் சந்தித்துதாக வேண்டுமல்லவா? ஒருவேளை சிவில் சர்வீஸ் தேர்வுகுறித்து தங்கள் உற்சாகத்தினை குலைக்கும் அளவிற்கு எவரேனும், ஏதேனும் கூறினால்கூட, அவற்றை அச்சுறுத்தலாக கொள்ளாமல் இது பத்தாம் வகுப்புத்தேர்வு,
+2 தேர்வு போன்றோ கிடையாது. ஆகவே, ‘வெற்றி பெற நன்கு முயற்சிக்க வேண்டும்’ எனும் ‘எச்சரிக்கை’ மனோபாவத்தில் அணுக வேண்டும். இந்த தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெற, பயனுள்ள, உத்திகள் மிகுந்த, சிறந்த வழிகாட்டுதல் ஆகிய மூன்றும் சிறப்பாக அமைந்துவிட்டால், முயற்சியானது சற்று எளிதாகவே வசப்படும்.
கேள்வி: சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற ‘யுபிஎஸ்ஸி’ தேர்விற்கான பயிற்சி
மையங்களில் படித்தாக வேண்டுமென்பது அவசியமா?
பதில்: சி.ஏ, ஐ.ஐ.டி, நீட் போன்ற எவ்விதமான தேர்விற்கும் பயிற்சிமையத்தில்
இணைந்து படித்தாக வேண்டுமென்பது அப்படியொன்றும் கட்டாயமில்லை என்றுதான் கூறுவேன். இப்படி பயிற்சி மையங்கள் நடத்தப்பட வேண்டுமென்றால்,
அதில் படிக்க வருபவர்களுக்குத் தேவையான இடவசதி, மின்சாரம், பயிற்சியாளர்களுக்கு
சம்பளம் போன்ற நிர்வாகத்தேவைகள் அவசியமாகிவிடுகிறது. அவற்றை ஈடுகட்ட வியாபார நோக்கத்தில் செயல்பட்டால்தான்
முடியும். முற்றிலும் இலவச சேவையாக செய்ய வேண்டுமென்றால்,
அதற்கென அதிகப்படியான வாய்ப்பும், வசதியும் மிதமிஞ்சி தேவைப்படும். ஒருவர் தானாக சிவில் சர்வீஸ் தேர்வினை எதிர்கொள்கிறார்
என்றால், அவர் பொதுவான புரிதல்கள் அவருக்கு புதிராக இருக்கக்கூடும். அவருக்கென இருக்கும் சுயமான ஆர்வம், பிறரின் தூண்டுதல் ஆகியவற்றால் அவர் முயற்சிக்கலாம்.
ஆனால், ஒரு அகாடமி என்று வந்து விட்டால், ’இந்தந்த பாடத்திட்டங்களில், இப்படி, இப்படியெல்லாம் படிக்கலாம்’ என்பதுடன், பாடங்களைப் படிப்பதிலும், அவர் படிக்கும் அகாடமியால் நடத்தப்படும் மாடல் தேர்வுகளில் கலந்து கொண்டு, தன் பலம் மற்றும் பலவீனங்களை உணர்ந்து, தக்க வழிகாட்டுதலுடன் தன்னை மெருகேற்றிக்கொள்ள முடியும். அந்த அகாடமிக்கென ஒரு பொதுப்படையான ஞானக்கோட்பாடு இருக்கும். அவற்றின் வழிகாட்டுதலுடன் தேர்விற்கான பயிற்சியை எப்படி மேற்கொள்வது? என்னென்ன கேள்விகளுக்கு எப்படி பதிலளிப்பது? என்பவற்றில் ஒரு பிடிமானத்துடன் தெளிவு பெறமுடியும். இந்தத் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள்
ஒரே மாதிரியானவைதானே?..
ஆனால்.. ஒரு சில அகாடமிகளில் வெற்றி சதவீதம் அதிகமாகவும், வேறு சிலவற்றில் அந்த சதவீதம் குறைவாகவும் உள்ளனவே! ஆக, வெற்றி பெற வைக்கக்கூடிய அகாடமிகளில்
சிறந்த கோட்பாடு இருப்பதாகத்தானே பொருளாகும்? அந்தக் கோட்பாடுகளை, வழிகாட்டுதலை மாணவர்கள் உள்வாங்கி, சரிவர பயன்படுத்தி, தங்களை மெருகேற்றிக்கொண்டால் நிச்சயம் வெற்றிபெறுவர். இது ஒரு அகாடமியின் கலாச்சாரம். ஒரு பத்து ஏக்கர் நிலப்பரப்பில், உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில்
ஒன்றான ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் பெயரால் பிரமாண்டமான ஒரு கட்டடத்தை எழுப்பி, அமெரிக்காவிலிருந்து ஆசிரியர்களைக் கொண்டுவந்துவிட்டால், எம்.பி.ஏ படிப்பிற்கான பயிற்சியை அளித்துவிட முடியுமா? என்றால் நிச்சயம் முடியாது. ஏன் என்றால், அங்கு தேவைப்படும் கலாச்சாரம்
(Culture) விடுபட்டுப்போகிறது. ஆகவே, அத்தகைய சிரந்த கலாச்சாரத்தை மாணவர்களுக்குத்தர
வேண்டும். அவ்வாறு தந்தால்தான் மாணவர்களின் கவனத்திறன் மற்றும் ஈடுபாடு ஆகியன விரைவில் கைகூடும். அடுத்ததாக 10 க்கும் மேற்பட்டோர், 50 க்கும் மேற்பட்டோர் குழுவாக இயங்கி படிக்கும்போது பலதரப்பட்ட கருத்துகள், சிந்தனைகள் கலந்து, அவர்களின் திறன் மேம்படும். இத்தகைய வாய்ப்பானது, தனித்தனியாக படிக்கும்போது கிடைப்பதில்லை. இப்போது நான் கூறப்போவது பெரும்பாலான அகாடமிகளில் இருப்பதில்லை. அது என்னவெனில், மாணவர்களின் திறன்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவரிடம் ஒவ்வொருவிதமான தனித்துவத்திறன்
இருக்கும். அதாவது, பாடங்களை சிறந்த முறையில் மனப்பாடம் செய்துகொள்ளவும், அவற்றை சிறப்பாக எழுதிவிடக்கூடிய
ஆற்றலுடன் ஒருவர் இருந்தால், அதே பாடங்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் அவருக்கு குறைவாக இருக்கக்கூடும். வேறு சிலருக்கு பாடங்கள் எளிதில் புரிந்துவிடும். ஆனால், அவர்களுக்கு மனப்பாடம் செய்யும் ஆற்றல் இல்லாமல் போகலாம். சிலர் நன்றாகப் புரிந்து படித்துவிடுவர்.
ஆனால், அவர்களால் சிறப்பாக எழுதத்தெரியாது.
இன்னும் சிலர் எல்லாவற்றையும் சிறப்பாக செய்யக்கூடியவர்களாகவும், 10 மதிப்பெண்களுக்கான
கேள்விகளுக்கு எளிதாக பதிலளித்துவிடுவர். ஆனால், 2 மதிப்பெண்களுக்குரிய கேள்விகளுக்கு பதிலளிக்க மிகவும் சிரமப்படுவர். இத்தகையச் சூழலில் அவர்களுடைய இயல்பான பலம், பலவீனம் ஆகியவற்றைத் துல்லியமாக கண்டறிந்து, அவற்றை சரிசெய்தாலே போதும். அந்த மாணவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவர்.
சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு அவர்களைச் சுற்றி நிகழ்பவை எல்லாமே பாட்த்திட்டம் போன்றுதான். இந்த பூமிப்பந்தின் மையத்திலிருந்து அண்டவெளியின் மையம் வரை உள்ள அனைத்துமே பாடத்திட்டத்தில் இருக்கின்றன. ஒருவர் அறிவியல் பாடத்தில் மிகுந்த தேர்ச்சியுடையவராக இருந்தபோதும்,
கணிதவியலில் சராசரிக்கும் கீழே என்றால், மனத்திறனுக்கு என்ன செய்வது? அதை நுட்பமாகக் கண்டறிந்து அவரது திறனை மேம்படுத்தியாக வேண்டும். சரி.. இதை ஒரு தனி நபராக செய்துவிட முடியுமா? என்றால் நிச்சயம் முடியாது. காலமும் கடந்துவிடும்.
இதற்காகவேதான் ‘குரு’என்கிற நிலையில், ஒருவரால் வழிநடத்தப்பட்டால் விரைவாக சாதிக்க இயலும். அந்த குருவானவர் தொழில் ரீதியாக தன்னுடைய முழுத்திறனையும்
மாணவருக்கு அர்ப்பணிக்க வேண்டும். இப்படிப்பட்ட அடிப்படையான சில விஷயங்கள் அகாடமியின் சிறந்த பங்களிப்பாக இருக்கின்றன. ஒரு அகாடமியில் 200 அல்லது 300 மாணவர்கள் சேர்ந்திருக்கும்போது அவர்கள் ஒவ்வொருவரின் இயல்புகளையும் கண்டறிந்து செயல்படுவது சற்று கடினமாக இருக்கலாம். இதில் எனது தனிப்பட்ட கருத்து என்னவெனில், 25 முதல் 50 மாணவர்கள் வரை மட்டும் மாணவர்கள் பயிலும்போது மிகச்சிறப்பாக அந்த அகாடமி வழிநடத்தி, கணிசமான மாணவர்களை தேர்வில் வெற்றி பெறச் செய்யமுடியும் என்பதே. மாணவர்கள் தேர்விற்குத் தயாராகும்போது அவர்களின் பலவீனமான செயல்பாடுகளை கண்டறிவதில் பெரும்பாலான அகாடமிகள் செய்வதில்லை என்றே எண்ணுகிறேன். இதைச் செய்வதற்கான வாய்ப்புகளும் மிக்க்குறைவாக இருப்பதாக அறிகிறேன். முடிவாக சிவில் சர்வீஸ் தேர்விற்கான படிப்பினை தனியாகவே படிக்கலாம். இருப்பினும் பயிற்சி மையங்களில் இணைந்து தேர்விற்குத் தயாராவதில் கூடுதல் பலன்கள் கிட்டும் என்பது என் நம்பிக்கையாகும்.
--------------------------------------------------
No comments:
Post a Comment