Friday, September 18, 2026

125.ஏன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சர்ச்சையாகிறது?


   ஏன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சர்ச்சையாகிறது?

            விநாயகர் சதுர்த்தி ஊர்வலமானது மிகவும் எழுச்சியோடு நடைபெற்று வருகிறது. ’இது கட்டமைக்கப்பட்டதுஎன்று கூற முடியாது. ஒரு சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டு செட்டப் செய்கிறார்கள் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆனாலும், விநாயகர் வழிபாடு மற்றும் ஊர்வலம் என்பது இயற்கையான தன்னெழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதே உண்மை.

தமிழகத்தில் ஒரு சில கோயில்களில் பெருந்திரளாக கூட்டம் கூடுகிறது. இது ஏன்? என்று திட்டமிட்ட வரையறைக்குள் அடக்க முடியாது. உதாரணத்திற்கு, சென்னையில் உள்ள மயிலாப்பூர் கற்பகாம்பாள் திருக்கோயிலில் ஆண்டு முழுவதும் நிறைய விழாக்கள் நடைபெற்று வருகின்றன. அதில் மிகவும் பிரசித்திப்பெற்ற விழா என்றால், 63 நாயன்மார்கள் குறித்த நட்த்தப்படும் 63 மூவர் விழா!. இதேபோல் மதுரை மீனாட்சி  அம்மன் திருக்கோயிலிலும் பல்வேறு விழாக்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுவதுண்டு. ஆயினும் கள்லழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி அதைத் தொடர்ந்து மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் ஆகியவை சுமார் 10 லட்சம் மக்கள் கூடி மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.  திருச்செந்தூர் முருகன் திருத்தலத்தில் ஷஷ்டி விரத வழிபாடு, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, பழனி மலை முருகன் கோவிலில் தைப்பூச வழிபாடு ஆகிய அனைத்துமே வரலாறு, புராணப் பின்னணியுடன் மற்றும் மக்களின் இயல்புகள் அவர்தம் நம்பிக்கைகள் ஆகியவற்றால் பிரபலமாக கொண்டாடப்படுகின்றன. மதத்தின் செயல்பாடு ஒரு விழாவிற்குள் அது சார்ந்த நிகழ்ச்சிகளுக்குள் கட்டமைக்கிறது. ஆனால், இதற்கு யாராலோ திட்டமிட்டு, கட்டமைக்கப்பட்டதா? என்றால், நிச்சயமாக இல்லை. தனியே அமர்ந்து இறைவனை தியானித்து, எவ்வளவு ஆத்ம சுகம் பெறுகிறோமோ அதுபோல் மக்கள் குழுவாக இயங்கி, விழாவைக்கொண்டாடி ஆத்ம சுகம் பெறுவதே இவ்விழாக்களின் அடிப்படை. இவை இரண்டையுமே மதமும், அதன் வழிமுறைகளுமே கற்றுத்தருகின்றன. இப்படி மக்கள் கூட்டமாக, குழுக்களாக தன்னெழுச்சியாகக் கொண்டாடுவது பல இடங்களில், பல சந்தர்ப்பங்களில் நிகழ்கின்றன. 

தற்போது மிகவும் பிரசித்தியாக, மாபெரும் எழுச்சியாகக் கொண்டாடப் படும்விநாயகர் சதுர்த்தி வழிபாடுஎன்பது, இந்தியா முழுமையுமே பரவலாக அனைத்து தரப்பு மக்களாலு கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கும் முன் மகாராஷ்டிரா மாநிலத்தின் கிராமப்புறங்களில் அதிக எண்ணிக்கையில் இருந்தன. அங்கெல்லாம் அன்று காலையில் மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை உருவாக்கி பூஜை செய்வர். பின் மாலையில் நீர் நிலைகளில் கரைப்பார்கள். ஒரு சில இடங்களில் மூன்று தினங்கள் வரை இந்த நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. இதனை அந்தக் காலகட்டத்தில் நம் நாட்டின் சுதந்திரப்போராட்டத் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் கூர்ந்து நோக்கினார். அதன்படி, ’சுதந்திரப்போராட்டத்திற்கு அதிக எண்ணிக்கையிலும், அதே வேளையில் மிகவும் தைரியம் வாய்ந்த கூட்டத்தைக் கூட்ட வேண்டும்என்றால், இந்த விநாயகர் சதுர்த்தி விழா ஏதுவாக அமையும் என்கிற முடிவிற்கு வந்தார். அதற்காக அன்றைய பாம்பே மாநகரத்தில் முன்னெடுத்து அறிமுகப்படுத்தினார். அவருடைய ஏற்பாட்டின்படி அதிகப்படியான மக்களை ஒரே இடத்தில் கூட்டுவதற்காகவும், அவர்களை அந்த இடத்தை நோக்கி ஈர்ப்பதற்காகவும் விநாயகர் சிலையின் அளவை பிரமாண்ட தோற்றத்துடன் ஏற்பாடு செய்தார். இதன் மூலம் தொலைவில் இருந்து பார்ப்பவர்களுக்கும் எளிதாகத் தெரியும்படியாக விநாயகர் சிலை வைக்கப்பட்டது. இதனால் மக்கள் வெகுவாக ஈர்க்கப்பட்டனர்.

பொதுவாக தனித்தனியாக இருக்கும்போது, மக்களுக்கு தைரியம் குறைவாக இருக்கும். அதேவேளையில் கூட்டமாக இருக்கும்போது அசாத்திய தைரியம் ஏற்படும். அந்த வகையில், மகிழ்ச்சி, பக்தி, அசாத்திய தைரியம் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்தன. இத்தகைய ஏற்பாடு சுதந்திர வேட்கையை வேகப்படுத்துவதற்கான வாய்ப்பு அமைந்தது. எப்போது, எங்கே கூட்டம் அதிகளவில் சேர்ந்தாலும் 144 தடை உத்தரவைப்பிறப்பித்த அப்போதைய ஆங்கிலேய அரசாங்கம் சற்று கெடுபிடியான அணுகுமுறையோடுதான் விநாயகர் சதுர்த்தி விழாவையும் அணுகியது. கூட்டம் அதிகளவில் சேர்ந்து, அதன்மூலம் ஒரு சித்தாந்தம் பலப்பட்டு, அதுவே விடுதலைப்போராட்டமாக எழுச்சி பெற்றால், அது ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக மாறிவிடும் என்கிற எண்ண ஓட்டம் அவர்களுக்கு இருந்தது. கூட்டம் சேராமல் இருந்துவிட்டால் எந்த ஒரு சித்தாந்தமும் புத்தக அளவில் வெறும் தத்துவார்த்தக் கருத்துக்களாக மட்டுமே இருந்துவிடும். வெகுஜனத்திற்கு போய்ச் சேராது. அவரவர் தனித்தனியாகப் படித்துவிட்டு தனித்தனியாகவே போய்விடுவார்கள். காரல் மார்க்ஸ் Class in itself; Class for itself’ எனும் கூற்று ஒன்று பிரபலமானது. ’Class for itself’ என்றால் மட்டுமே எதிர்ப்பார்க்கப்படும் அரசியல் எனும் ஒற்றைப்புள்ளியை நோக்கி மக்கள் கூட்டம் நகரும். அதுவே நல்ல மாற்றத்தை உருவாக்க முடியும். ஆனால், எதிர்ப்பு வலுக்கிறது. பொதுவாக மராத்திய மக்களுக்கு ஒரு பண்பு உண்டு. அவர்கள் பெரும்பாலும் தாங்களாக சண்டைக்குச் செல்ல மாட்டார்கள். ஒருவேளை அதற்கான கட்டாயம் ஏற்பட்டால் அதிதீவிரமாக இறங்கி விடுவார்கள். ஆண்கள் மட்டும்தான் என்றில்லை. பெண்களும் அப்படியே! அங்கு மூன்றுமுறை மக்கள் கிளர்ச்சி வெடித்தெழுந்திருக்கிறது. உதாரணமாக இந்தியாவின் வேறெந்தப் பகுதிகளிலும்வட்டித்தொழில்சம்பந்தமாக அதனை எதிர்த்து கிளர்ச்சி வெடித்ததில்லை! ஆனால், மராட்டிய மண்ணில் அது நிகழ்ந்தது!

இன்றைய நவீன காலத்திலும்கூட, மராட்டிய புத்தாண்டின்போது அங்குள்ள பெண்கள் நேர்த்தியாக புடவை உடுத்தி, தங்களை பாரம்பரியமானத் தோற்றத்துடன் அலங்கரித்துக் கொண்டு, தலைப்பாகையும் அணிந்து, சுமார் 50 பெண்கள் ஒன்றிணைந்து ஒரு குழுவாக புல்லட்டுகளை ஓட்டிச் செல்லும் காட்சி காணக் கண்கொள்ளாது. அதுமட்டுமின்றி தனது கம்பீரமான பேரொலியால் மக்களை அதிர வைக்கும் பிரமாண்ட மேளங்களை பெண்கள் தட்டி முழக்கி தங்கள் அசாத்தியத் திறமையை வெளிப்படுத்துவர். அவர்கள் வாசிப்பதை நேரில் கண்டு;கேட்பவர்களுக்கு தங்களையுமறியால் எழுச்சி கொள்வர். அதைக்காணும் ஆண்கள், ‘பெண்களே இந்த அளவிற்கு தங்கள் திறமையை துணிச்சலாக வெளிப்படுத்தும்போது ஆண்களாகிய எங்களுக்கென்ன? நாங்களும் அசத்துவோம்என ஆண்களும் தங்கள் பங்களிப்பை அளிப்பார்கள். இந்த நிகழ்ச்சியானது ஒவ்வொருவரும் கண்டு களிக்க வேண்டிய ஒன்று என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆக, சுதந்திரப்போராட்டத்திற்காக தோன்றியது என்றாலும், நூறு ஆண்டுகள் கழிந்தபின்னரும் மென்மேலும் எழுச்சியோடு தேசமெங்கும் கொண்டாடப்படுகிறது.

 மும்பையில்லால்பாக் ராஜாஎனப்படும்லால்பாக் கணபதிஇருப்பார்.  அவருக்கு ஒரு நிரந்தரமான கோயில் இருக்காது. சுமார் 25 அடி உயரத்துடன் ஒரு பந்தலின் கீழ்தான் வீற்றிருப்பார். (’சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த் நடித்தபாட்ஷாதிரைப்படத்தில் வெடிகுண்டு வைக்கப்படும் காட்சியை இந்த லால்பாக் ராஜா வீற்றிருப்பது போன்ற செட் அமைத்து, அதில் படமாக்கியிருப்பர்.) ஆனாலும், ஒரு கோயில் போலவே காட்சியளிக்கும். இப்போதெல்லாம் குளிர்சாதன வசதியைக்கூட ஏற்பாடு செய்கிறார்கள். அங்கே பல்வேறு மண்டல்களிலிருந்து  மேலும் 15 -20 கணபதிகள் வருவர். உண்டியல்தொகை மட்டுமே பல கோடி வரும். பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் பலரும் தரிசனத்திற்காக போட்டிபோட்டுக் கொண்டு வருவர். ஆனாலும், அங்கு சூப்பர் ஸ்டார் என்றால்லால்பாக் ராஜாமட்டுமே. அவரை தரிசனம் கிட்டுவதே பெரிய விஷயமாகும். அந்த அளவிற்கு தள்ளுமுள்ளு காணப்படும். உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால், திருமலை, திருச்செந்தூர் கோயில்களின் நிலைமைபோல் இருக்கும். லால்பாக் ராஜாவின் விஜர்சனம் (கரைத்தல்) 13 – அல்லது 14 ஆம் நாளில் மரைன் டிரைவ் என்னுமிடத்தில் விமரிசையாக நடைபெறும். அங்கு அனைத்து விநாயகர்களும் ஏற்கனவே கரைக்கப்பட்டிருப்பர். லால்பாக் ராஜா மட்டும் தனியாக, தனித்துவமாக வருவார். நம்மூரான மதுரை கள்ளழகர் திருவிழாவில் மக்கள் பெருங்கூட்டமாகக் கலந்து கொள்வதுபோல், ‘லால்பாக் ராஜாவிஜர்சன நிகழ்ச்சியில் சுமார் 10- 15 லட்சம் மக்கள் பங்கேற்பார்கள். வழிநெடுக உணவு, பிற பானங்கள் விநியோகிக்கப்பட்ட வண்ணம் இருக்கும்.  மேலும் இசைநிகழ்ச்சிகள், நடனம் ஆகிய அனைத்தும் பக்திப்பரவசத்தால் திளைத்திருக்கும்.

நேதாஜியின் கோட்பாடு:

இந்த விநாயகர் சதுர்த்தி விழாவானது, சாதி, மதங்களைக்கடந்து, இந்தியக் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாக விளங்குகிறது. இந்த விழா முன்னெடுப்பினை சுமார் 15 ஆண்டுகளாக மேலும் சிலருடன் இணைந்து பாலகங்காதர திலகர் செய்துவந்தார். அதன்பின் இப்போதுவரை அது தொடர்ந்து வருகிறது. பாலகங்காதர திலகர் மட்டும்தான் இதனை முன்னெடுத்தாரா? நேதாஜி போன்றோர் ஏதும் செய்யவில்லையா? என சிலர் கேட்பதுண்டு. நேதாஜி அவர்கள் தனது தத்துவார்த்தமான கொள்கைகளை, அணுகுமுறைகளை வடிவமைத்து, முன்னெடுக்கும் முன்னரே அப்போதைய காலக்கட்டத்தில் இரண்டாம் உலகப்போர் நடைபெறத் தொடங்கியதால், அதை மையமாகக் கொண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிடுவதற்காக அவர் ஆயுதம் தாங்கிய போராளியாக உருவெடுத்துவிட்டார். இதனாலேயே நேதாஜி அவர்கள் தன் தத்துவங்களை எடுத்துக்கூறி, கூட்டத்தைக்கூட்ட வேண்டுமென்கிற அவசியம் எழாமல் போனது. அது சம்பந்தமான என்னுடைய புரிதல் என்னவென்றால், பாலகங்காதர திலகர் மதம் சார்பான விஷயத்தில் பங்களிப்பு செய்து மக்களை ஒருங்கிணைத்தாரென்றால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் சாதி, மதங்களைக்கடந்த ஒட்டுமொத்த இந்தியக்கலாச்சார ரீதியிலான ஒற்றுமையை மேம்படுத்த வேண்டுமென்பதில் உறுதிபூண்டிருந்தார் என்றே என்னுடைய புரிதல் இருக்கிறது. இது சரியானதுதான் என்றும் உறுதிகொள்கிறேன். உதாரணமாக நாம் தைப்பொங்கலை தமிழர்த் திருநாளாகக் கொண்டாடுகிறோம். அதில் எந்தக் கடவுளரையும் முன்னிறுத்துவதில்லை. இது மதங்களைக்கடந்து மேலிருக்கும் கலாச்சாரம். இது போன்ற இந்திய கலாச்சார ரீதியிலான ஒருங்கிணைப்பு உயர்த்திப்பிடிக்க வேண்டுமென்று வேண்டுமென்றுதான் நேதாஜி அவர்கள் எண்ணியிருக்கிறார். மேலும் அவர் சோஷலிசக் கொள்கையை சோஷலிசம் வித் இந்தியன் வேல்யூ’ (Socialism with Indian value) என்றே கூறியிருக்கிறார். 

தமிழ்நாட்டில் விநாயகர் விஜர்சனம்:

            தமிழ்நாட்டில் விநாயகர் விஜர்சனம் சம்பந்தமான நிகழ்வுகளைப் பார்த்துமும்பையில் செய்வது போல தமிழ்நாட்டிலும் செய்கிறீர்களா? உங்களுக்கான கூட்டத்தைச் சேர்க்கிறீர்களா?’ என்று பலருக்கும் சந்தேகம் எழுந்து கேட்பதுண்டு. அனைத்து மதங்களுமே அவரவர் மதத்தை முன்னிறுத்தி கூட்டத்தைக் கூட்டுவதுபோல் இவர்களும் செய்கிறார்கள். அவ்வாறு கூடும் கூட்டத்தினால் பிரச்சினை உண்டாகும் என்றால், அதை எப்படிக்கையாள்வது என்பதே அரசாங்கத்தின் பணியாகும்.

                                                                                                                                              பாலகங்காதர திலகரின் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த முன்னெடுப்பு ஒருவகையில் மராட்டிய மாநிலத்தின் ஒற்றுமைக்கு வழிகோலியது என்று கூறலாம். அரசியல் கட்சியானசிவசேனாவின் எழுச்சிக்கு நிச்சயமாக விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒரு முக்கிய காரணமென்றால் மிகையில்லை. இதன் பின்னணியில் இருப்பது மராத்திய உணர்வு. அதன் வெளிப்பாடு இந்த விநாயகர் சதுர்த்தி நிகழ்வுகள்

 

    மராத்திய விநாயகர் சதுர்த்தி எழுச்சியைப்பார்த்து, அதைப்போலவே ஏன் நம் தமிழ்நாட்டில் செய்யக்கூடாது? என்கிற எண்ணம் 80, 90 களில் எழுந்தது. இதில் முக்கியமான குறிக்கோள் விழாக் கொண்டாட்டமே. இரண்டாவது காரணம் ஒருங்கிணைப்பு. மூன்றாவது காரணம் இது ஒரு நல்ல விஷயத்திற்காக என்கிற எண்ணம். இது இவ்வாறு இருந்தாலும், தமிழ்நாட்டில் விநாயகர் விஜர்சனத்திற்காக அவரைக் கொண்டு செல்லும் ஊர்வலத்தின் பாதையில் பிரச்சினைகள் எழுகின்றன. இதில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எல்லாம் எழுந்தன. குறிப்பிட்ட பாத வழியாகத்தான் ஊர்வலம் போவோம் என்று கூறும்போது பிரச்சினை வெடிக்கிறது. இத்தகைய பிரச்சினை தேவையில்லை என்பதே என் கருத்து. காரணம், நமக்கு கொண்டாட்டம் மற்றும் சிலைகளைக் கடலுக்குக் கொண்டு சென்று கரைப்பது மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டும். தொன்று தொட்டு நடந்துவரும் ஊர்வலப்பாதையில் பிரச்சினைகள் எழுவதில்லை. அப்படியே எழுந்தாலும் சட்ட ரீதியில் அணுகலாம். ஆனால், புதிதுப் புதிதாக பாதைஇகளை உருவாக்குவது பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. இவை போன்றவை அல்லாமல் பக்தியுணர்வைப்பரப்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்வது நல்லது. தமிழ்நாட்டில் பாஜக மற்றும் பல்வேறு இந்து இயக்கங்கள் முன்னெடுக்கும்போது கூடும் கூட்டமானது மற்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அரசியல் ரீதியாக பாஜக பலம் கூடுவதுபோல் தெரிந்தால்இந்துத்துவாவை கையிலெடுக்கிறார்கள்என பிற கட்சிகள்  அவ்வாறு எதிர்ப்பு காட்டுகிறார்கள். இதே விநாயகர் சதுர்த்திக்காக ஆங்காங்கு பிள்ளையாரை வைத்து வணங்கி பின்னர் விஜர்சனம் செய்யும் முறையானது மும்பையில் மண்டல் ரீதியில் எத்தகைய சார்புகளுமின்றி பொதுவாக நடப்பது வழக்கம். அதுபோல் இங்கும் நடந்தால் விரும்பத்தகாத அசம்பாவிதங்கள், மனவருத்தங்கள் தவிர்க்கப்படும்.  எந்தக் கட்சியாக இருந்தாலும் நிகழ்ச்சியை ஆதரிக்கலாம். ஆனால், அவை முன்னெடுக்கக்கூடாது. இது என் தீர்க்கமான கருத்து.

-------------

 

125.ஏன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சர்ச்சையாகிறது?

    ஏன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சர்ச்சையாகிறது?             விநாயகர் சதுர்த்தி ஊர்வலமானது மிகவும் எழுச்சியோடு நடைபெற்று வருகி...