Monday, August 17, 2026

70.ஜப்பானில் சரஸ்வதியும் விநாயகரும் (முருகன் எங்கு பிறந்தார் வடக்கா? தெற்கா? (பகுதி -3)

 

               ஜப்பானில் சரஸ்வதியும் விநாயகரும்

(முருகன் எங்கு பிறந்தார் வடக்கா? தெற்கா? (பகுதி -3)


            பொதுவாகவேஎ எல்லோருக்கும் ஒரு சந்தேகம் எழக்கூடும். அதாவது, மலைவாழ் மக்களுக்கும், சமவெளிப்பகுதியில் வாழும் மக்களுக்குமிடையே அதீதமான தொடர்புகள் இருந்ததில்லை. அப்படியிருக்க மலைமீது வாழ்ந்துகொண்டிருந்த மக்கள் வணங்கிய தெய்வமானது எப்படி சமவெளிப்ப்பரப்பில் பிரபலமான தெய்வமாக மாறியிருக்க முடியும்? மேலும் அதுவரையிலும் சமவெளியில் வணங்கப்பட்டுக்கொண்டிருந்த தெய்வங்களின் வழிபாடு என்னவாயின? என்கிற சந்தேகம் கேள்வியாக பலரின் மனதிலும் எழுகிறது. இதற்காக எனது பார்வையில் ஒரு விளக்கம் தரமுடியும். மனித குல வரலாறே மலைகளிலிருந்துதான் தொடங்குகிறது. நிலம் கூஉட முதலில் ’மலை’, அங்கிருந்து கீழிறங்கினால் ’காடு’, அதையும் கடந்தால் ’கடல்’. இவை அனைத்தையூம் தொடர்புப்படுத்துவதுபவை நதிகள். இதுதான் சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த அமைப்பு. நம் தமிழ் மரபின் தொன்மையை ஆய்ந்தோமானால், மலை மீது வாழ்ந்த மக்கள் ‘குறவர், குறத்தி’ என வழங்கப்பட்டனர். நாம் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வரும் ‘குறவர், குறத்தியர்’ அனைவரையும் நாம் அவ்வாறே எண்ணுகிறோம். ஆனால், உண்மை அதுவல்ல. முழு தமிழ்மண்ணும் முன்னொரு காலத்தில் குறவர்- குறத்தியர்தான். எல்லோரும் மலைமீது வாழ்ந்தவர்கள்தான். மலைகளிலிருந்து கீழிறங்கி அவர்கள் கால்பதித்த இடம் காடு. காட்டில்தான் விலங்குகளைப் பராமரித்தல், வேட்டையாடுதல் போன்ற ஆயர் சமூகமாக (pastoral society) பரிணாமம் அடைகிறார்கள். அதன்பின்னர், காட்டைத் திருத்தி விவசாயப் பயிர் வளர்க்கத் தொடங்கினர். இதுவே ’மருதநிலம்’ என்றழைக்கப்பட்டது. இங்கு வாழத்தொடங்கியவர்களுக்கு ‘உழவர், உழத்தியர்’ என்று அடையாளப்பெயர்கள் வழப்படலாயிற்று. இக்காலக்கட்டத்தில்தான் ‘பரத்தையர்’ எனும் சொல் பிறப்பெடுக்கிறது. அதற்கும் முன்னர் அந்த சொல்லும், அதன் வாழ்க்கை முறையும் வழக்கத்தில் இருந்ததில்லை. அதுநாள்வரையில் மக்களிடையே செல்வ வளத்தில் எவ்வித வேறுபாடுகளும் இருந்திருக்கவில்லை. இதற்கும் அடுத்ததாக ’நெய்தல் (கடல்சார் பகுதி)’. இந்த நெய்தல் பகுதியில் ’பரதவர், பரத்தியர்’ என்று மக்கள் வகைபடுத்தப்பட்டனர். இவை அனைத்துமே அந்தந்த நிலவியல் அமைப்பு சார்ந்து வழங்கப்பட்ட பெயர்கள். மேற்கூறிய நான்குவகை திணை நிலங்கள் திரிந்துபோனால் அதன் பெயர் ‘பாலை’ என ஏற்கனவே அறிந்திருந்தோம். இந்த நிலையில்தான் உக்கிரமான தெய்வமாக ‘கொற்றவை’ எனும் பெண் தெய்வம் வணங்கப்படலானது. இங்கு வாழ்ந்தவர்கள் எயினர், எயிற்றியர் ஆவர். இவ்வாறு குறிப்பிடப்படுபவை அனைத்துமே அந்தந்தப்பகுதியில் வழங்கப்பட்ட பெயர்கள். சாதிய கட்டமைப்பு என்பது வெறும் தொழில் சார்ந்த வாழ்வியல் முறையால் வரவில்லை. வட்டாரப் பெயர்ச் சொல்லாடல்களால் உண்டாயின என்பது ஒரு கருத்து. இப்படியெல்லாம் சுமார் 5000 ஆண்டுகளுக்கும் மேலாக திணைகள் மாறி, தொழில்முறை மாறி, பெயர்கள் மாறி, தொடர்ந்து பயணித்த போதும் தமிழர்கள் மலைமீது தாங்கள் வணங்கிய கடவுளான முருகனை நெய்தல் பகுதியில் இருந்த திருச்செந்தூர் (மணற்குன்றின்மீது) வரை கொண்டு சென்றுவிட்டனர். இங்கே முருகனுக்கு வழங்கப்படும் பெயர்களுக்கு இணையாக வேதத்திலும் பெயர்கள் வருகின்றன. வருணன், இந்திரன், ஆகியோர் பெருங்கடவுளர்கள். மாயோன் என்கிற பெயர் வேதத்தின் ஆரம்பத்தில் வரவில்லை. விஷ்ணு என்கிற பெயர்கூட பின்னால்தான் வருகிறது. அதன்பின் இராமர், கிருஷ்ணர் போன்ற தெய்வப்பெயர்கள் வேகமெடூக்கத் தொடங்கிய போது, நீலநிறமுடைய ‘மால்’, மிகப்பெரியவர் என்கிற பொருளில் ‘பெருமாள்’ என காலப்போக்கில் கலந்து விட்டன. 

நமது இந்து பாரம்பரியத்தை ‘Synchronitic ’ என்று கூறுகிறோம். இதன் பொருள் என்னவென்றால், ’அங்கங்கே சென்று, அந்தந்த இடத்தை அப்படியே அரவணைத்துக்கொள்’ என்பதே. ஆக, தத்துவம் பயணித்துக்கொண்டே இருக்கும். ஆங்காங்கே இருக்கும் தெய்வங்களை மறைத்து அழிப்பது கிடையாது. அவற்றை தன்னகத்தே எடுத்துக்கொள்வது. அவ்வாறு எடுத்துக்கொண்டு சிவ ரூம், சக்தி ரூபம் அல்லது விஷ்ணு ரூபமோ கொடுத்துவிடும். விநாயகர், முருகன், ஐயப்பன் போன்ற கடவுளர்கள் சிவ, சக்தி, விஷ்ணு ரூபங்கங்களைக் தாண்டியவை. கடவுளர்களின் மனைவியர் பற்றியும் ருசிகரமான செய்திகள் உள்ளன. தமிழ் மண்ணில் விநாயகர் பிரம்மச்சாரியாகவும், வடஇந்தியாவில் அதே விநாயகர் இரண்டு மனைவியரை கொண்டவராகவும், அதேவேளையில் முருகனுக்கு இரண்டு மனைவியர்  என்றால் மிக ஆச்சரியமாகவும் பார்ப்பார்கள். இன்னும் ஜப்பானியரிடம் கூறினால் இரண்டையுமே ஆச்சரியமாகக் காண்பார்கள்.  ஏனென்றால் ஜப்பானில் விநாயகர், சரஸ்வதி ஆகிய இருவருமே உள்ளனர். சரஸ்வதிக்கு கணவர் ‘பிரம்மா’வைப்பற்றி ஜப்பானியர்களுக்குத் தெரியாது. ஆனால், தொடர்ந்து சரஸ்வதியை வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர். விநாயகரைக் கும்பிடும் அவர்களுக்கு சிவனைப் பற்றி தெரியாது. அவர்களுக்கு சரஸ்வதி என்பவர் அறிவிற்கான தெய்வமாகவும், விநாயகர் ஞானத்திற்கான தெய்வமாகவும் விளங்குகிறார்கள். இந்த இரு தெய்வங்களுமே புத்தமதத்தில் இணைக்கப்பட்டு ஜப்பானில் இர்ருக்கிறார்கள். ஆக அவரவர்கள் அவர்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொள்கின்றனர்.  பொதுவாக இறைநம்பிக்கை, வழிபாடுகள் பொறுத்த செய்திகள் இதிகாசத்தில் ஒன்று, நிலத்தில் ஒன்றுமாக நிலவி, அவை ஒன்றுக்கொன்று பயணிக்கின்றன. ஆனால், முருகன் விஷயத்தில் மட்டும் ஆங்காங்கே கலந்து பயணிக்கின்றன. மதம், தெய்வங்கள் பற்றிய நம்பிக்கைகளில் Mythology – இல் இருந்து வரவேண்டும். பைபிளில் யேசு கிறிஸ்துவை தெய்வீகமாகப் பார்க்கலாம். அல்லது உண்மைச் சம்பவமாகவும் பார்க்கலாம். தெய்வீகப்படி பார்த்தால் கன்னி கழியாத பெண் மாதா பெற்றெடுத்தக் குழந்தை யேசு. இது அறிவியல் கோட்பாட்டிற்குள் வராது. உண்மைச் சம்பவமாகப் பார்த்தால் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுப்பது. இதேபோன்ற பார்வையைத்தான் முருக கடவுள் விஷயத்திலும் பார்க்க வேண்டும். முருகன் விஷயத்தில் இரண்டுமே உள்ளன. தமிழ்மரபில் தொடர்ந்து பன்னெடுங்காலமாக கொண்டாடப்படும் கடவுள். என்னைப்பொறுத்தவரையிலும் முருகனுக்கு Mythology பின்புலமாக அமைந்திருக்கிறது என்றே கூறுவேன்.

---------------------------------------------------

69.’முருகனைப்பற்றிய சர்ச்சைகள்!’ (முருகன் எங்கு பிறந்தார் வடக்கா? தெற்கா? (பகுதி -2)

 

                     ’முருகனைப்பற்றிய சர்ச்சைகள்!’

(முருகன் எங்கு பிறந்தார் வடக்கா? தெற்கா? (பகுதி -2)


சீமானின் நிலைபாடு:

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்’ சீமான் அவர்கள் ‘முருகன் என்பவர் தமிழ்மண்ணில் பிறந்து இங்கேயே வளர்ந்தவர்’ என்கிற நிலைப்பாடு கொண்டுள்ளார். ‘முருகன் என் முப்பாட்டன்’ என்று முழங்குகிறார். நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு கோயில் கட்டுவதில்லையா? அவர்களுக்கு சிலைவைத்து தெய்வமாக வணங்குவதில்லையா? அதுபோலவே ’முருகன் முப்பாட்டன்’ என்கிறார் சீமான்.

சிறு,பெருந்தெய்வங்கள் வழிபாடு:

இந்துமதத்தின் வழிபாடுகளில் இரண்டு விதமான வழிபாடுகள் உள்ளன. முதலாவதாக ’The great tradition’, இரண்டாவது ‘The little tradition’ ஆகும்.  The great tradition’ என்பது நம் வேதங்களில், இராமாயணம், மகாபாரதம், குமார சம்பவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கடவுளர்கள். இந்திரன் எங்கே பிறந்தார் என்றால் யாருக்கும் தெரியாது. ஏஎனென்றால் அவர் தேவலோகத்தில் இருப்பபவர். சரி.. தேவலோகம் எங்கிருக்கிறது என்றால் அதுவும் தெரியாது. மகாரஷ்டிரத்தில் மிகவும் பிரபலமான கடவுள் விநாயகர். ஆனால், அவர் எங்கே பிறந்தார் என யாருக்கும் தெரியாது. மேற்கு வங்கத்தின் மிகவும் பிரபலமான கடவுள் ‘சக்திதேவி- (காளி)’. அவர் பிறந்ததும் எங்கே எனத்தெரியாது. ஏனென்றால் அவை (The Little Tradition- சிறு தேவதைகள் வழிபாடு) அல்ல. ஆனால், தமிழ்நாட்டில் ஐயனார், கருப்பசாமி போன்ற தெய்வங்கள் எல்லாம் சிறு தேவதைகள் வழிபாடு (Little Tradition) இவர்கள் வேதங்களில் கூறப்பட்டவர்கள் அல்ல., உபநிஷதங்களில், Mythology போன்ற எதிலும் இருக்க மாட்டார்கள். ஒருசில இடங்களில் எல்லைச்சாமிகள் என்பன போன்ற குறிப்புகள் வரலாமே தவிர ஐயனார் வரலாறு, கருப்பசாமி வரலாறு என பிரத்யேகமான குறிப்புகள் இல்லை. இதேபோல் சப்த கன்னியர் வழிபாடு போன்ற பல்வேறு சிறுதேவதைகளின் வழிபாடு எல்லாமே நம் மண் சார்ந்த, மரபு சார்ந்த,  குலதெய்வ வழிபாடுகளாகும். இவை போன்ற தெய்வங்களுக்கு வேத, உபநிஷதங்களின் அரவணைப்போ, தத்துவவியல் சார்ந்த அரவணைப்போ இருப்பதில்லை. அப்படியானால், இவர்கள் எவ்வாறு தோன்றினர்? இவர்கள் யாவரும் இம்மண்ணிலே தோன்றினர். இம்மண்ணிலேயே கலந்தவர்கள். ஆனால், அவர்கள் தங்கள் வாழ்க்கையை ஒரு தெய்வீக வாழ்க்கையாக அமைத்துக்கொண்டனர். அதனால்தான் இதுபோன்ற சிறுதேவதைகளை ‘முன்னோர் வழிபாடு’ என்று கூறுகிறோம். பெரும்பாலான சமூகவியல், வரலாற்று ஆய்வுகள் இப்படித்தான் வரையறுக்கின்றன.  இதையே சீமான் அவர்கள் முன்னெடுப்பு செய்து, ’ஐயனார், கருப்பசாமி, சப்த கன்னியர் போன்றோருடன் முருக்க்கடவுள் கூட எங்கள் முன்னோர்தான்’ என்கிற கருத்தை முன்வைக்கிறார்.

சங்ககாலத் தெய்வங்கள்:

சங்ககால இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள திணைகள் அதாவது நிலங்களின் வகைப்பாடுகளில் குறிஞ்சித்திணையும் ஒன்று. இந்ததிணையின் கடவுள் யார்? ’குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்’ என்று சொல்லப்படக்கூடிய முருகன். இதில், முருகன் என்பது தமிழ்ச்சொல். குமரன், ஸ்கந்தன், கார்த்திகேயன் என்று முருகனைக் குறிப்பிடக்கூடிய பிற பெயர்கள் எல்லாம் சமஸ்கிருத வார்த்தைகள். வேலன் என்கிற பெயர் தமிழ்ச்சொல். ’வேலைத் தாங்கியவன் வேலன்’ என்பர். இதனால்தான் குறிஞ்சித்திணை மரபில் ‘வேலன் வெறியாட்டம்’ என்று உண்டு. இந்த வெறியாட்டத்திற்கு ‘சேவல்’, ‘ஆடு’ ஆகியன பலியாகக் கொடுக்கப்படுகின்றன.  வெறியாட்டம் ஆடி, குறி சொல்லிவிட்டு, அசைவ உணவை உட்கொள்வர். அப்படியென்றால் குறிஞ்சித்திணை முருகனும், இப்போது வழிபாடு செய்யப்படக்கூடிய முருகனும் ஒருவர்தானா? என்கிற கேள்வி பிறந்துவிடுகிறது. தமிழ்மண்ணின் பிற திணைகளான காடு சார்ந்த முல்லை நிலத்திற்க்கு திருமால், வயல் சார்ந்த மருதநிலத்திற்கு இந்திரன், கடல் சார்ந்த நெய்தல் நிலத்திற்கு வருணன், இதர நான்கு திணைகளும் திரிந்த (வறண்ட) பாலை நிலத்திற்கு கொற்றவை என தெய்வங்கள் வகைப்படுத்தப்படுகின்றனர். நம் சங்க்கால வாழ்வியல், இலக்கியக்கூறுகளின்படி மேற்குறிப்பிட்ட தெய்வங்கள் நம் மரபில் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கின்றனர். ரிக்வேத்த்தில் அடிக்கடி குறிப்பிடப்படும் தெய்வாங்கள் ருத்ரன், இந்திரன், வருணன் ஆகியோர். அதன்பின் வருணன் முக்கியத்துவத்துடன் இந்து பாரம்பரிய மரபில் பிற்காலத்தில் குறிப்பிடப்படவில்லை. இன்று அந்தக்கடவுளைப்பற்றி பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால், ஒருகாலத்தில் ’வருணன் மேய பெருமணல் உலகம்’ என வருணன் சிறப்பிக்கப்பட்டார். ’வேந்தன் மேய தீம்புனல் உலகம்’ அதாவது, ’வேந்தன்மேய’ என்றால் அரசன். இதற்கடுத்து இந்திரன் வந்துவிடுகிறார். ‘மாயோன் மேய காடுரை உலகம்’ அதாவது திருமால். மாயங்களை அதிகமாகச் செய்யக்கூடியவர் என்பதால் திருமாலை ’மாயோன்’ என்று நாம் பொருள் பொதிந்து வழங்குகிறோம். ஆனால், தமிழில் அந்தகாலகட்டத்திலேயே மாயோன் என்று சொல்லப்படுகிறது. இன்றும் தமிழகத்தில் உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் ‘மாயன், சிறுமாயன், பெருமாயன், மாயக்கா’ மாயாண்டி எனக்குறிப்பிடப்படும் பெயர்கள் எல்லாமே திருமாலை குறிப்பிடும் பெயர்களே. இந்த மாயோனை நாம் தொடர்புபடுத்தி விடுகிறோம். மாயோனுக்கு கோயிலகள் பெருவாரியாகக் காணப்படுவதில்லை. அவர் பெருமாள் கடவுளுடன் ஐக்கியமாகிவிட்டார். முற்காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் தொடர்ந்து 20 நாள்கள் கொண்டாடக்கூடிய விழாவாக ‘இந்திரவிழா’ மிகவும் பிரபலம்! தமிழர்களால் அதிக நாள்கள் கொண்டாடப்பட்ட விழாவென்றால் அது ‘இந்திரவிழாதான்’. சிலப்பதிகாரத்தில் கோவல- மாதவி மனஸ்தாபம் ஏற்பட்டதெல்லாம் இந்திரவிழாவின்போதுதான்! ஆக வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்திரக்கடவுள் தமிழர்களுக்கும் கடவுளாக விளங்குகிறார். வருணன் என்கிற கடவுள் நெய்தலுக்காக என்பது  தொல்காப்பியத்தில் உள்ளது. மருதத்தில் இந்திரன் என்கிற பெயருடைய கடவுள் விளங்குகிறார். இவர்கள் இருவருமே வேதத்திலும் ஒரே சமகாலத்தில் குறிக்கப்படுகின்றனர். ஆனால், இவை உண்மையில் அவர்களைத்தான் குறிக்கிறதா? அல்லது வெவ்வேறு இருவரைக் குறிக்கின்றனவா? என்கிற கேள்வி நம்முன் தொக்கி நிற்கிறது. ஆனால், காலப்போக்கில் இந்திரன், வருணன் போன்றோருக்கு பெருங்கோயில்கள் எழுப்பப்படவில்லை.  இவை கொற்றவை’ எனப்படும் காளிவழிபாட்டுடன் கலந்து விட்டன.

பிற மதத்தவரின் பார்வை:

சேயோனாகிய முருகனின் புகழ்பாட ‘திருமுருகாற்றுப்படை’ நூலைப்போல் மாயோனாகிய திருமாலின் பகழ்பாட பிரத்யேகமான நூல்கள் ஏதும் இல்லை. ஆனால், முருகனுக்கு மட்டும் திருமுருகாற்றுப்படை போல அதன்பின் பல நூல்கள் பிறந்துள்ளன. அவர்மட்டும் தனித்துவத்துடன் தமிழர்களில் மரபில் தொடர்கிறார். மதம் சார்ந்த விஷயங்களினுள்ளே நுழைந்து  சிறு விஷயத்தைப் பற்றிக் கூறினாலும், பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் ’இவர்கள் மாற்றி மாற்றிச் சொல்கின்றனர். இவர்களிடம் நிறைய கதைகள்தான் உள்ளன, நிறைய மூடநம்பிக்கைகள் இருக்கின்றன’ என ஊதிப்பெரிதாக்கி, சீரியஸாக கையாண்டு வெளிப்படுத்துகிறார்கள். இதனால்தான், இந்துமதம் மட்டும் ஏதோ பலவீனமாக இருப்பதுபோலவும், பிற மதங்கள் அனைத்தும் பலமாக இருப்பதுபோலவ் உம் ஒரு பார்வை நிலவுகிறது. பட்டிமன்ற, ஆன்மீகப் பேச்சாளர் திரு.சுகிசிவம் கூறுவது என்னவென்றால், வட இந்தியாவில் இருப்பவர் கார்த்திகேயன். ஆனால், இங்கே ஏற்கனவே இருக்கும் முருகக்கடவுள் என்பவருக்கு பூஜை செய்வதற்கு நியமிக்கப்பட்டவர்கள் அல்லது உரிமையைக் கோரி பெற்றவர்கள்தான் முருகனை சுப்ரமணியன் என்றெல்லாம் கூறி, முருகனையும் கார்ர்த்திகேயனையும் ஒன்றாக்கி, இந்த சமூகத்தை குழப்பிவிட்டார்கள் என்று தன் கருத்தை முன்வைத்தார். ’முருகன் என்பவர் இந்த மண்ணின் கடவுள். அவருடன் Mythology கடவுளை இங்கே கலந்து விட்டார்கள்’ என்று கூறியிருந்தார். ஆனால், இதற்கு ஆதாரம் வேண்டுமல்லவா? அதை அவரால் காட்ட முடியாது. இதுபோல் எந்த மதத்தின் நம்பிக்கைகளுக்குள் சென்றாலும் இது போன்ற நிறைய விஷயங்கள் இருக்கத்தான் செய்யும் என்பதே என் கருத்து!

(தொடரும்)

--------------------------------------------------------

 

68.முருகன் எங்கு பிறந்தார் வடக்கா? தெற்கா? (பகுதி 1)

 

முருகன் எங்கு பிறந்தார் வடக்கா? தெற்கா?

            கடவுள் முருகன் வடக்கே பிறந்தாரா? அல்லது தெற்கே பிறந்தாரா? என்கிற விஷயமானது மிகவும் சர்ச்சைக்குரிய, பரபரப்பான விவாதங்கள் நடக்கின்றன. இது சம்பந்தமாக தெலுங்குப்படத்தயாரிப்பாளரின் ட்விட் செய்தியைப் பார்த்தேன். நான் அடிப்படையிலேயே முருகபக்தன்தான். அதனால், என்னைப்போன்றவர்களுக்கும் இது ஒரு சோதனைதான். தமிழகத்தில் ஏற்கனவே 2017-18 காலகட்டத்தில் முருகக்கடவுள் மீது பாடப்பட்ட ’கந்த சஷ்டி கவசம்’ நூலைப்பற்றி ’கருப்பர் கூட்டம்’ எனும் குழுவினரால் மிகவும் தரக்குறைவாக விமர்சிக்கப்ப்பட்டது. அது சம்பந்தமாக அவர்கள் சிறைக்குக் கூட  அனுப்பப்பட்டனர். பொதுவாக ஒவ்வொரு மதத்தினரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு அம்சம் என்னவென்றால், அவரவர் மதத்தின் மேல் பக்தியும், மற்ற மதங்களின் மீது மரியாதையும் இருக்க வேண்டும். ’பக்தி’ என்பது கடவுளுக்கும் மனிதர்களுக்குமிடையிலான ’பந்தம்’. இது அதீதமான உணவுப்பூர்வமாகும். இது தனி மனிதரிடம் அல்லது குழுவாகவோ கூட இருக்கலாம். ஒரு குழுவாக இருப்பதுவே மதம் எனப்படுகிறது. ஒருவர் தானே ஒரு கடவுளை உருவகப்படுத்தி, அதன் பெயரைக்கூட வெளிப்படுத்தாமல் ஒரு கோயிலையும் எழுப்பி, அதில் அவர் மட்டுமே வழிபாடு செய்து வந்தாரென்றால் அது அவருடைய தனியுரிமையும், விருப்பமுமாகும். அதையே குழுவாக இணைந்து ஒரு ஊரே வழிபட்டால், அதுவே மதமாகும்.

பிரபலமாகும் வழிபாடுகள்:

தமிழ்நாட்டில் முருக பெருமானே பிரதானமான கடவுளாக விளங்குகிறார். நாம் வரலாற்று ரீதியாக பன்னெடுங்காலமாகவே அவர் வழிபடப்படுகிறார்.  இன்றைக்கு நாம் வழிபடக்கூடிய பல கடவுளர்களை நாம் சங்க இலக்கியங்களில் காணமுடியாது. அதற்கும் முற்பட்ட தொல்காப்பியத்திலும் காண முடியாது. மேலும், அதற்கும் முற்பட்ட செவிவழிச் செய்திகளிலும் காணமுடிவதில்லை. ஆனால், நமது முருகக் கடவுள் எல்லா காலங்களிலும் மக்களால் வழிபடப்பட்டிருக்கிறார். ‘சேயோன் மேய மைவரை உலகம்’ என தொல்காப்பியம், சங்க இலக்கிய நூல்களான திருமுருகாற்றுப்படை, பரிபாடல் போன்றவற்றிலும் முருகனுக்கான குறிப்புகள் அதிகமாகக்கிடைக்கின்றன. இப்படிப்பட்ட சிறப்பம்சங்கள் மற்ற கடவுளர்களுக்கு மிகவும் குறைவு. நம் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கடவுளர் இருக்கின்றனர். ஷீரடி சாய்பாபா இன்று பரவலாக அனைவராலும் வணங்கப்படுகிறார். அவர் காலம் மிக சமீபத்தையது. அவர் எங்கு பிறந்தார்? எப்படி வாழ்ந்தார்? என்பதற்கான செய்திகள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டிலும் அவர் பிரபலமாக வணங்கப்படுவதால் அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என யாரும் கூறிவிட முடியாது. திருப்பதி கோயில் மிகவும் பிரபலமாக விளங்கி வருகிறது. அந்தத் திருப்பதி கோயிலுக்கும் போட்டியாக இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலும், திருச்செந்தூர் முருகன் கோயிலும் விளங்குகின்றன. எந்த ஒரு கடவுளின் மீதும் மக்களுக்கு திடீரென பக்தி கூடுகிறது?; பக்தி குறைகிறது? என யாராலும் கணிக்க முடியாது. ஒரு காலத்தில் ‘திருமோகூர்’ பெருமாள் கோயிலுக்குச் சென்றால் அங்கே அர்ச்சகர் ஒருவர் மட்டுமே இருப்பார். அவரே விளக்குகளை எரியவிட்டு, சுவாமிக்கு அவரே ஆரத்தி காண்பித்து, தீர்த்தம், ஜடாரி சேவைகளை வழங்குவார். ஆனால் இன்றைக்கு நிலைமை எப்படி இருக்கிறது? அவ்வளவு பெரிய கோயிலுக்குள் நாம் நிற்பதற்கு இடமேயில்லை! மக்களின் பக்தியானது கடல் அலை போல மாறி மாறி வந்துகொண்டேயிருக்கும். 

            முருகனைப்பற்றிய சர்ச்சைக்குரிய தெலுங்குத் திரைப்படம் குறித்துப் பார்த்தோமானல், அதன் இயக்குனர் என்ன சொல்கிறார்?: ‘"Born in the North. Forged in the Heartland. Worshipped in the South and belonging to the universe" எனக் கூறியிருக்கிறார். அவர் கூறியதில் கடைசி வரியை நானே மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொள்கிறேன். இனி வரும் காலங்களில் முருகன் என்பவர் இந்த பிரபஞ்சத்தை ஆளுவார். முருகக்கடவுளின் குணாதிசயத்தின் அடிப்படையிலேயே இதைக் கூறுகிறேன். இவ்வுலகிற்கு ஆன்மீகம் சம்பந்தமான வருங்காலத்தேவை அவரிடம் மட்டுமே உள்ளது. இது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை.

முருகனின் பிறப்பு குறித்த கோட்பாடு:

            முருகனைப்பற்றிய தற்போதைய தமிழக சர்ச்சை என்னவென்றால், ‘முருகன் நம்முடைய கடவுள். அவருக்காக ஆறுபடை வீடுகள் இங்கே உள்ளன.’ என்கிற நம்பிக்கை வேரூன்றியுள்ளது. சங்கப் புலவர் நக்கீரரின் ’திருமுருகாற்றுப்படை’ நூலின் செய்திப்படி தமிழகத்தின் மதுரைக்கு அருகிலுள்ள ‘அழகர் மலை’ மேலே அமைந்துள்ள ‘பழமுதிர்ச் சோலை’ தலத்தில்தான் முருகன் தோன்றியதாக ஐதீகம். (அதேவேளையில் முருகன் தோன்றியது வடதமிழகத்தில் உள்ள ‘பழமுதிர்ச் சோலை’யில்தான் என்று முருக பக்தர்களிடையே விவாதங்கள் நடந்து வருகின்றன!) அழகர்மலையில் உள்ள பழமுதிர்ச்சோலைப் பகுதியில் ‘சரவணப்பொய்கை’ எனும் ஏரியில் பிறந்ததாகச் சொல்கின்றனர். இந்த கட்டம்வரை ஏதும் பிரச்சினையில்லை. இதிகாசப்படி சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு நெருப்புப்பொறிகள் தோன்றி, அந்த ஏரியில் இருக்கும் ஆறு தாமரை மலர்கள் மீது விழுகின்றன. அவை ஆறு குழந்தைகளாக பிறக்கின்றன. அவ்வாறு பிறந்த அந்த ஆறு குழந்தைகளைப் பராமரிக்க ஆறு கார்த்திகைப்பெண்களை சிவனின் மனைவி பார்வதி நியமிக்கிறார். அதன்பின் அந்தப் பெண்கள் வளர்க்கும் ஆறு குழந்தைகளையும் ஒரே குழந்தையாக பார்வதித்தாயார்  இணைக்கிறார். 

ஸ்டெம்செல் தொழில்நுட்பம்:          

ஒரு தாய் இல்லாமல் குழந்தை பிறப்பு சாத்தியமா? யாராவது நம்புவார்களா? ஆனால், இன்று அம்மா இல்லாமலே குழந்தைகள் பிறக்கின்றன. எங்கோ ஒரு விஷயத்தை எடுத்து, வேறெங்கேயோ பதியம்போட்டு ஒரு குழந்தை பிறக்கிறது. அப்படிப்பட்ட பெண்ணிற்கு surrogacy mother என்று பெயர். ஆனால், இதே விஷயத்தை ஐம்பது ஆண்டுகளுக்கும் முன்னர் யாரும் கற்பனை செய்துகூடப் பார்த்ததில்லை.  இன்னும் சில ஆண்டுகள் கழிந்தால், ஒரு குழந்தை பிறப்பதற்கு பெண்ணே தேவைப்படாமல் போகலாம்! ஆக, முருகக்கடவுளின் பிறப்பு பற்றிய விஷயமானது தொன்மையான காலத்திலேயே இன்றைய அறிவியல் உலகிற்கு இணையாக உள்ளது!.  அறிவியலில் ‘ஸ்டெம் செல்’ என்கிற கூற்று இன்று நாம் அனைவரும் அறிந்ததே. அதாவது ஒரு செல்லிலிருந்து செக்ஸுவலாக இல்லாமல் இன்னொரு செல்லை உருவாக்குவது. இதுவே ஸ்டெம் செல். உடலின் சக்தி அதில் உள்ளது. இந்த செல்லானது மகப்பேறு ஆனபின் குழந்தையின் தொப்புள் கொடியில் செழுமையான அளவில் கிடைக்கும். நம் முன்னோர்கள் அதை எடுத்து அரைத்து தாயத்திற்குள் வைத்து அந்தக்குழந்தையின் கழுத்திலேயே கட்டிவிடுவார்கள். ஒருவேளை அந்தக்குழந்தைக்கோ அல்லது அக்குழந்தையின் மரபணு சார்ந்த குடும்பத்திற்கோ உடல் நோய் ஏதாவது வந்துவிட்டால், அந்த தாயத்திற்குள் இருக்கும் அந்த செல் துகளை அரைத்து மருந்தாக உட்கொள்வர். அதனால், நோயிலிருந்து விடுபடுவர். இப்படிப்பட்ட சிகிச்சை முறையில் ஒருவர் உடல்நலம் தேறவில்லை எனில், ’அவர் இனி பிழைக்க மாட்டார்’ என்பதே அக்காலத்தைய மருத்துவத்துறையின் கணக்கு! இன்று அறிவியல்படி அதே ஸ்டெம் செல்லைத்தான் நாம் பயன்படுத்தி வருகிறோம். ஏனென்றால் ஸ்டெம் செல்லை எப்போது வேண்டுமென்றாலும் வேறு செல்லின் சேர்க்கையின்றி தனியாக நாம் வளர்க்க முடியும். இப்படி நாம் வளர்ப்பதன் மூலம் மனித ஈரலையோ, நுரையீரலையோ உருவாக்க முடியும். இந்தத் தொழில்நுட்பமானது தற்போதைய நிலையில் ஆரம்பகட்டத்தில் உள்ளது. வெற்றிகரமாக சாத்தியப்பட இன்னும் சிலகாலம் தேவைப்படலாம். இந்த ஸ்டெம் செல் தொழில்நுட்பமே முருக பெருமானின் பிறப்பை ஒத்திருக்கும். தாய் இல்லாமலே முருக பெருமான் பிரந்திருக்கிறார். சிவபெருமானின் நெற்றியிலிருந்து ஏன் ஆறு பொறிகள் தோன்றின? சாதரண நேரத்தில் ஏன் அவ்வாறு போகவில்லை? என கேள்வி வரும்போது அதற்கு Mythology நிறைய பதில்களைக் கொடுத்திருக்கின்றன. சிவபெருமான் ஏன் தியானத்தில் இருந்தார்? அவர் காமனை எரிப்பதற்காகத்தான் தன் கண்களைத் திறந்தார். அப்படியானால், ஏன் காமனை ஏன் எரிக்க வேண்டும்? காமன் ஏன் சிவபெருமானின் நேருக்கு நேர் நின்று கொண்டிருந்தார்? அந்நேரத்தில் பார்வதிதேவி என்ன செய்துகொண்டிருந்தார்? போன்ற எல்லாவற்றிற்கும் விளக்கங்கள் அவற்றில் உள்ளன. இந்த Mythology யின்படி நடந்தவையெல்லாம் சரியென்றே வைத்துக்கொண்டாலும், இது பூமிக்கு வரும்போது எங்கு வந்தது? இதுதான் பிரச்சினைக்குரிய விஷயம். அதாவது முருகன் பிறந்தது இமயமலையிலா? அல்லது பழமுதிர்ச்சோலையிலா? இப்படித்தான் போகிறது.

இமயமலையும் சிவனும்:

சிவபெருமானும் இமயமலைவாசிதான். ஆனால், இதுசம்பந்தமாக உத்தரகாண்ட் மாநிலமோ ஹிமாச்சல பிரதேசமோ, அஸ்ஸாம், மேகாலயா, சிக்கிம் போன்ற மாநிலங்கள் இன்னும் சண்டை போடவில்லை. அவை எல்லாமே இமயமலைப் பிரதேசம்தானே!? ஏன் அப்படி? அவர்களுக்குள் ஒரு பொதுவான ஏற்பு இருக்கிறது. இமயமலை முழுமையுமே சிவனுக்குச் சொந்தம். அதேபோல பார்வதி. ’பர்வதம்’ என்றால் மலை. மலையின் மகள்தான் பார்வதி. ஆகவே, சிவனுக்கும் பார்வதிக்கும் முழுமையாகச் சொந்தமானது என்று கருதப்படுகிறது. இந்த எண்ண ஓட்டம் தமிழர்களுக்கு மட்டும் ஏன் இருக்கவில்லை? ’பழமுதிர்ச்சோலையில்தான் முருகன் பிறந்தார்’ என்று கூறுகிறார்கள்? ஏன் அவ்வாறு கூறுகிறார்கள்? ஏனென்றால், பழமுதிர்ச்சோலை என்பது சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக அறியப்படுகிறது. நக்கீரர் தன் திருமுருகாற்றுப்படையில் அதுபற்றி கூறியிருக்கிறார். பழமுதிர்ச் சோலையில் முருகன் ஏன் பிறக்க வேண்டும்? இங்கே நாம் சிங்கமுகன், தாரகாசுரன் போன்ற அசுரர்களைக் குறிப்பிடுகின்றோம்? இவர்களை அழிப்பதற்காகவே முருகன் பிறப்பெடுக்கிறார். இந்துமத சித்தாந்தத்தின்படி விஷ்ணுதான் (திருமால்) அவதாரமெடுப்பார். சிவன் திருவிளையாடல் செய்வதுடன் சரி. குழந்தையாகப்பிறந்து, வளர்ந்து, பிறப்பின் கடமையைச் செய்துவிட்டு தன் அவதாரத்தை முடித்துக்கொள்பவர் விஷ்ணு. இன்னொரு தெய்வம் அம்பாள் (அம்மன்). சிவன் எடுக்க வேண்டிய அவதாரத்தை முருகனை எடுக்க வைத்தார்? இதுபோன்ற குறுக்குக் கேள்விகள் வரும்! ஆக, ஐதீகப்படி அசுரனை வதம் செய்ய, ’சிக்கல்’ திருத்தலத்தில் பார்வதிதேவி தன் மகன் முருகனுக்கு வேல் ஒன்றை வழங்குகிறார். இன்றும் வழங்கும் நாளில் சிக்கல் சிங்காரவேலனுக்கு வியர்வை பெருக்கெடுக்கிறது. தன் தாய் வழங்கிய வேலினால் திருசெந்தூரில் வைத்து சூரனை வதம் செய்து வெல்கிறார். தான் வென்றதன் பயனை தேவர்களின் தலைவரான இந்திரனுக்கு (தேவேந்திரன்) அளிக்கிறார். அக்காலத்தைய மரபுப்படி வெற்றியை ஈட்டித்தந்தவருக்கு பெண் கொடுக்கும் வழக்கமுண்டு. அதன்படி இந்திரனின் மகளான தேவயானியை (தெய்வயானை) முருகனுக்கு திருப்பரங்குன்றத்தில் வைத்து மணம் முடித்து வைக்கின்றனர். இதன்பின் முருகன் திருத்தணியில் வேட்டுவக்குலப் பெண்ணான வள்ளியை திருமணம் செய்து கொள்கிறார். (தேவயானியும், வள்ளியில் அவர்களின் முற்பிறப்பில் சகோதரிகளாவர். அப்போது முருகனை மணம்முடிக்க அவர்கள் தவம் இருந்தனர். ஆனால், அப்போது முருகன் பிரம்மச்சாரி அவதாரமாக இருந்ததனால் அந்த சகோதரிகளை மணம்  செய்து கொள்ளவில்லை. இந்த சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா நடித்த ‘கந்தன் கருணை’ திரைப்படம் வெளிவந்து வெற்றிநடை போட்டிருக்கிறது. அந்தத் திரைப்படத்தில் மானிட வாழ்க்கையை போன்ற உணர்வுகளைப்பிரதிபலித்து காட்சிகளை நன்கு விவரித்து  அமைத்திருப்பார்கள்.

வட இந்திய முருகன்:

            வட இந்தியாவில் இருக்கும் இமயமலையில் தாய்தந்தையர் தனக்கு ஞானப்பழம் தனக்கு தரவில்லையே என ஆத்திரப்பட்டு, தன் குடும்பத்துடன் சண்டை போட்டுவிட்டு, தமிழகத்தின் பழனிமலைக்கு முருகன் ஆண்டிக்கோலத்தில் வந்துவிடுகிறார். இது நம் வழக்கத்தில் பேசப்படுகிறது. நமது முருகனின் ’அறுபடை வீடு’ சம்பந்தமான எந்தக்கதையோ, கருத்தியலோ வட இந்தியாவுடன் தொடர்பு கிடையாது. வட இந்தியாவைப் பொறுத்தவரையில் காளிதாசர் இயற்றிய ‘குமார சம்பவம்’ நூலில் சிவனின் மகனாக கார்த்திகேயன் (முருகன்) சித்தரிக்கப்படுகிறார். அதில் முருகன் தேவயானியை மணம் முடிப்பது மட்டும் இருக்கும். இன்றைய இளம் தலைமுறை முருகனைப் பற்றி பின்வரும் கதையைத் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம் என்று எண்ணுகிறேன்.

முருகனின் தனிநாடு:

நாரதர் கலகம் நன்மையில் முடியும்’ என்பது நம் இந்துமதத்தின்  நம்பிக்கை. ஒருமுறை நாரதர் ஒரு ஞானப்பழத்துடன் சிவ-பார்வதி தம்பதியைச் சந்தித்து, அவர்களிடம் வழங்குகிறார். ஆனால், ஒரே ஒரு நிபந்தனைதான். அதாவது அந்த ஞானப்பழத்தை வெட்டி பங்கிடாமல் ஒருவரே சாப்பிட வேண்டும். அதுவே நற்பயன் தரும் என்று நாரதர் கூறுகிறார். அதைப்பெற்றுக்கொண்ட சிவனும் பார்வதியும் ‘நாம்தான் பெரியவர்களாயிற்றே.. நாம் சாப்பிட்டு என்னவாகிடப் போகிறது?’ என்று எண்ணி, தங்கள் பிள்ளைகளான விநாயகர் மற்றும் முருகன் ஆகிய இருவரில் யாராவது ஒருவருக்குத் தந்துவிடலாம். அதிலும் ஒரு சிக்கல் வருகிறது. ’சீனியாரிட்டி அடிப்படையில் நான் முருகனுக்கு அண்ணன். ஆகவே அந்தப்பழம் எனக்குத்தான்’ என விநாயகர் வாதிடுகிறார். ஆனால், இளையவரான முருகனோ ’நான் கடைக்குட்டி. ஆகவே, நானே செல்லப்பிள்ளை. அதனால், எனக்குத்தான் அந்தப் பழம் தரப்பட வேண்டும்’ என்கிறார். இருவரின் பிடிவாதத்தால் இருவருக்குமிடையே போட்டி நடத்தி, அப்போட்டியில் வெற்றி பெற்பவருக்கு பழத்தை பரிசாகத் தந்து விடலாம் என பெரியவர்கள் முடிவு செய்கிறார்கள். இங்கிருந்து புறப்பட்டுச் சென்று இவ்வுலகை சுற்றிவிட்டு மீண்டும் யார் முதலில் வருகிறாரோ ’அவருக்கே ஞானப்பழம்’ என முடிவு செய்கிறார்கள். இதைக் கேட்டவுடன் அந்த நொடியிலேயே வெறெந்த எதிர்கேள்வியும் கேட்காமல், சட்டென தன் மயில் வாகனத்தில் புறப்பட்டுச் சென்று விடுகிறார். அண்ணன் விநாயகரோ, ‘உலகம் என்றால் என்ன?’ என தன் சந்தேகத்தைக் கேட்கிறார். அவருக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி, ’ஒரு குழந்தைக்கு அம்மாவும் அப்பாவுமே உலகம். இதுவே உண்மை’ என்று ஒரு தத்துவத்தை வளரும் தலைமுறைக்கு பொருளாதாயமாக கூறினார்கள். ஆகவே, விநாயகர் தன் தாய் தந்தையரை மூன்றுமுறை சுற்றிவந்து போட்டியில் வென்று, ஞானப்பழத்தை பெற்றுக்கொள்கிறார். அந்த கணத்திலேயே உலகைச் சுற்றிவரச் சென்ற முருகன் வந்து சேருகிறார். தன் அண்ணன் ஞானப்பழத்தைப் பெற்றுக்கொண்ட்து உட்பட நடந்தவை அனைத்தையும் அறிந்துகொள்கிறார். ஆகவே ஆவேசமடைந்து, ‘இனி எனக்கென்று ஒரு மலை.. எனக்கென்று மக்கள்.. எனக்கென்று ஒரு நாடு.. எனக்கென்று ஒரு கொடி.. என்னை அங்கு வந்து சந்தியுங்கள்’ என்று கூறிச் சென்றுவிடுகிறார். இந்த mythology சம்பவத்தை நாம் தான் கூறியிருக்கிறோம். ஆனால், பழனிமலை குறித்து சொல்லவேயில்லை!

                                                                                                            (தொடரும்)

----------------------------------------------------------------

70.ஜப்பானில் சரஸ்வதியும் விநாயகரும் (முருகன் எங்கு பிறந்தார் வடக்கா? தெற்கா? (பகுதி -3)

                 ஜப்பானில் சரஸ்வதியும் விநாயகரும் ( முருகன் எங்கு பிறந்தார் வடக்கா ? தெற்கா ? ( பகுதி - 3)             பொதுவாகவேஎ எல்ல...