மன அழுத்தம் இல்லாமல் வாழ புதிய வழி !!
முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு.இறையன்பு அவர்கள் ஒரு புத்தகத்தில்,
‘மனம் எங்கே இருக்கிறது? என்கிற பிரச்சினை ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க,
மனமே ஒரு பிரச்சினையாக இருக்கிறது’ என்று எழுதியிருப்பார்.
’மனம்’என்பது மிகவும் கடினமான புதிராக விளங்குகிறது.
இந்த மனதை சைக்கியார்டிஸ்ட், சைக்கலாஜிஸ்ட்,
மெண்டலிஸ்ட் என பலரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஜோதிடர் மற்றும் மந்திரவாதிகளுமே
நம் மனதை மையமாக வைத்துதான் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு பேர், எத்தனையோ விதமாக தேடிய போதும், அதைப்பற்றி எவ்விதமான ஒரு தெளிவோ அல்லது புரிதலோ இதுவரை விஞ்ஞானப்பூர்வமாக இல்லை. ஆன்மீக ரீதியிலும் சற்று குழப்பமாகவே
இருந்து வருகிறது. ஒரு ஆச்சரியமான உண்மை
என்னவென்றால், வளர்ந்த நாடுகளில் உடல் ரீதியிலான பிரச்சினை மிகக் குறைவாகவும்,மனரீதியிலான
பிரச்சினைகள் அதிகமாகவும் இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. ஆனால், இங்கிலாந்து, அமெரிக்கா,
ஐரோப்பா ஆகிய நாடுகளைவிட நம் இந்தியாவில் மன ரீதியிலான பிரச்சினைகள் மிகவும் குறைவாக
இருக்கிறது. வளர்ந்த நாடுகளில் மிகவும் குறைவாக இருப்பது ஜப்பான் நாட்டில்தான். அவர்கள் மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றில்
நல்ல நிலையிலேயே வாழுகின்றனர். இதற்குக் காரணம் அவர்களின் மரபு வழி என்றே நான் கருதுகிறேன். இந்தியாவில் நாம்
இன்னமும் தாக்குப்பிடித்துக்கொண்டிருப்பதற்கு காரணம் நமது குடும்ப அமைப்பு, கூட்டுக்குடும்ப
அமைப்பு போன்றவை என்றே நான் எண்ணுகிறேன். இன்றைய இளைய தலைமுறைக்கு மன அழுத்தம் வருகிறதென்றால்
அவர்கள் 6 ஆம் வகுப்பு படிக்கத்தொடங்கும்போதே கல்வி சம்பந்தமாக ஆரம்பிக்கிறது என நினைக்கிறேன்.
காரணம் அந்தப்பருவத்திலேயே எந்நேரமும் ‘போட்டி, போட்டி, போட்டி’ என தயார் செய்யப்படுகிறார்கள்.
வீடு, பள்ளி, ட்யூஷன் வகுப்பு என அனைத்து இடங்களிலும் எந்நேரமும் இதே நிலைதான். ஆகவே
அவர்கள் இயல்பாகவே மன அழுத்தத்திற்கு ஆட்படுகிறார்கள். மன அழுத்தமானது எல்லோருக்கும்
ஒரே மாதிரி இருப்பதில்லை. ஆகவே ஒரு சிலருக்கு உடல் ஆரோக்கியப்பிரச்சினை வந்து விடுகிறது.
அடுத்ததாக ஸ்மார்ட் ஃபோன் பயன்பாடு. உதாரணமாக அதிக நேரம் வெயிலில் அலைந்துவிட்டு குளிர்பானம்
குடிக்கலாம் என ஆசைப்படுகிறோம். வெயிலில் அலைந்ததற்கும் குளிர்பானம் குடிப்பதற்கும்
ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா? குளிர்ச்சி என்கிற சுகத்தைவிட நம் வயிற்றுக்குள் சென்றதும்
குளிர்பானம் எதிர்மறையாகத்தான் வேலை செய்கிறது. மோர் குடித்தால் நல்லதுதான். ஆனால்,
நாம் குளிர்ச்சியாகத்தான் குடிக்கிறோம். அதுபோல சற்றுநேரம் ஃபோனைப்பார்த்தால் சரியாகிவிடுமோ?
என்கிற கோணத்தில் ஃபோனைப்பயன்படுத்துகிறார்கள். ஆனால், அதுவே ஒருவித தாக்கத்தைத்தருகிறது.
வாகனத்தை ஓரிட்த்தில் ஸ்டாண்டு போட்டு நிறுத்திவைத்துவிட்டு, அதன் இஞ்ஜினை இயக்கினால்
சப்தம் அதிகமாக வரும். அதன் அனைத்து பாகங்களும் அதிரும். அதுபோலத்தான் உடலும். அதுபோல்
உடல்ரீதியான இயக்கமில்லாமல் இருக்கும் போது, ஆரோக்கியக் குறைபாடு ஏற்படுகிறது. எப்போதும்
படிப்பின் மீது அதீத அக்கறை காட்டும் போது உடலில் மாறுபாடான எதிர்மறை செயல்பாடுகள்
ஏற்படுகின்றன. இந்தியாவில்1970 களில் எஸ்.எஸ்.எல்.சி இறுதித்தேர்விற்கான முடிவைத்தவிர
மாணவர்களுக்கு வேறு ஏதும் பெரிதான மன அழுத்தம் தந்ததில்லை. அதஈக்கூட சற்று இலகுவாகவே
கருதினார்கள். ஆனால், இன்றைய சூழல் அவ்வாறு இல்லை. தேர்வுகளிலேயே பல்வேறு வகைகளும்
நிலைகளும் உள்ளன. அவற்றை எதிர்கொள்வதற்காக குறைந்தபட்சம் ஓராண்டிற்கு முன்பிருந்து
தங்களை தயார்படுத்திக்கொள்கிறார்கள். அந்த காலகட்டத்தில் இரவு பகலும் அவர்களுக்கு மன
உளைச்சல் அதிகம்தான். காரணம், அவர்களால் எவ்வளவுதான் தாங்க முடியும்? மேலும், கூட்டுக்குடும்பக்கலாச்சாரம்
உடைந்து நியூக்ளியர் குடும்ப அமைப்பு வந்ததும் இதற்கு ஒரு காரணமாகும். ஒருவருக்கு சாப்பாடு
எந்தளவிற்கு அவசியமோ அதேபோல் எமோஷனும் அவசியம். அந்த எமோஷனை செயற்கையாக உருவாக்க முடியாது.
ஆக எமோஷன், அதீத கவனம், உணவுமுறை, வாழ்க்கையில் செட்டிலாக வேண்டுமென்கிற ரீதியிலான
எண்ண ஓட்டம் ஆகிய அனைத்துமே மன அழுத்த்த்திற்கான காரணிகளே. இதை சரி செய்யக்கூடிய, சரி
செய்ய வேண்டிய இரண்டு அம்சங்கள் எவை என்றா அரசு மற்றும் சமூகம். கடவுளைக் கண்டு வணங்கினால்
கஷ்டம் தீருமென்பது ஆன்மீக ரீதியிலான நம்பிக்கை. ஆனால், அந்த கடவுளை தரிசிக்கும்போது
கூட அமைதியாக, மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும். ஆனால், இன்றைய சூழலில் மக்கள்
அவ்வாறு இருக்க முடியவில்லை. அவர்கள் திருத்தலங்களில் முண்டியடித்துச் செல்கின்றனர்
என்பதை நாம் கண்டு வருகிறோம். சரி.. இனிமேல் இதெல்லாம் மாறிவிடுமா? அல்லது குறைந்து
விடுமா? என்றால் அதற்கு வாய்ப்பில்லை என்றே சொல்ல வேண்டும். ஆக ஒட்டுமொத்த சமூகத்திற்கே
மன அழுத்தம் இருக்கிறது. அந்த சமூகத்தில் ஒருசில தனி நபர்களுக்கு பாதிப்பு சற்று கூடுதலாக
இருக்கிறது. இதனைப் புரிந்து சமாளித்துக்கொள்ளும் திறன் யாருக்கெல்லாம் இருக்கிறதோ
அவர்கள் எல்லோரும் தப்பித்துவிடுகின்றனர். அவ்வாறு சமாளிக்க முடியாதவர்கள் செயலற்றுப்போகின்றனர்.
அந்த நிலைக்கு ஆளானவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை யோசிக்க வேண்டும். ஒரு குழந்தை
தன்னால் படிக்க முடியவில்லை என்று கூறுகிறது என்றால், அதற்கு ‘உன்னால் படிக்க முடியவில்லை
என்றால் நீ இப்படித்தான் ஆவாய்’ என்றால் எல்லாம் சரியாகிவிடுமா? அப்படிப்பட்ட குழந்தைக்கு
என்னவகையான எமோஷனல் பின்னணி, மற்றும் இன்னபிற ஆதாரவிஷயங்களை வழிகாட்டப்போகிறோம்? இப்படி
ஏதும் கிடைக்காத விரக்தியில் ஒருபக்கம் மதுவிற்கு அடிமையாகி விடுகின்றனர். அதுமட்டுமின்றி
இன்னும் சில வேறுவேறு விஷயங்களுக்கு அடிமைப்பட்டுப் போய்விடுகின்றனர். இன்றைய சூழலில்
படிப்பு என்பது மன அழுத்தம் தருகிறது என்றால், அடுத்ததாக வேலைவாய்ப்பு குறித்த மன அழுத்தம்
வேறு வந்துசேருகிறது. காலத்தின் வேகமான ஓட்டத்தில், அதீதமான விஞ்ஞான வளர்ச்சியில் அடுத்த
10 ஆண்டுகளில் என்ன நடக்கும் என்பதையே கணிக்க முடியாத அளவிற்கு உலகம் பயணிக்கிறது.
இப்போதே பிடித்தமான வேலை கிடைப்பதில்லை, அப்படியே கிடைத்தாலும் நீடித்து இருக்க முடியவில்லை.
அப்படியே இருந்தாலும் சம்பள உயர்வு கிட்டுவதில்லை. இவை மட்டுமின்றி நிறுவனங்கள் திடீரென
மூடப்படுவதால் ஒட்டுமொத்தமாக வாழ்வாதாரத்திற்கே பேராபத்து வந்து விடுகிறது. இவை எல்லாமே
மன அழுத்தம் தரக்கூடியவையே. இந்த நிலையானது திருமணம் வரைக்கும் ஒரு விதமாகவும், திருமணத்திற்குப்
பிறகு மேலும் பன்மடங்காகும். அதுவரைக்கும் ஒருவரை மட்டுமே பாதிக்க்க்கூடிய மன அழுத்தப்பிரச்சினையானது
மனை, குழந்தை என குடும்பத்தையே பாதிக்கும்.’மன அழுத்தத்தை’ நீக்கும் வகையில் கல்வி
சார்ந்த விஷயங்களை எப்படியெல்லாம் இலகுவாக்குவது? சிக்கல்களை எப்படி சரி செய்வது? வேலை
வாய்ப்புகளைப் பெருக்குவது எப்படி? அந்த வேலைகளுக்கும் குறைந்தபட்சமான உத்திரவாதம்
தருவது எப்படி? என்பனவெல்லாம் சிந்தித்து, பட்டியலிட்டு உதவும் அளவிற்கு அரசாங்கத்தின்
ஸிஸ்டம் சரியில்லாமல் இருக்கிறது. ஆனால், Populist measure என்கிற விஷயத்தைக்கையிலெடுத்து
ஆளுக்கு ரூ.5000/- என விநியோகம் செய்து விடுகிறார்கள். இந்த முறையானது வாக்கு வங்கிக்கு
வேண்டுமானால் உதவலாம். ஆனால், ஒரு தனிமனித மன அழுத்தத்திற்கு ஒருபோதும் துணை செய்யாது.
இன்று நிறைய இளைஞர்களின் தற்கொலைகளைப் பற்றி கேள்விப்படும்போது மனம் வலிக்கிறது. அவர்களைச்
சுற்றியுள்ளவர்களுக்கு தீராத் மனவலியும் வேதனையும் தருகிறது. அந்த இளைஞரின் ஆக்கப்பூர்வமான
சிந்ந்தனைகள், செய்ல்திறன் ஆகிய எதையுமே இந்த சமூகம் காணும்முன்பே அவர்கள் தங்கள் வாழ்க்கையை
முடித்துக்கொள்கிறார்கள். முன்பெல்லாம் கூட்டு குடும்பமாக இருந்தபோது தற்கொலைகள் இவ்வளவு
சர்வசாதாரணமாக நிகழ்ந்ததில்லை. இன்று நியூக்ளியர் குடும்பம் என்றானபின் தற்கொலை விகிதம்
அதிகரித்திருக்கிறது என்பது உண்மையே. ஆனால், மீண்டும் கூட்டுக்குடும்ப கலாச்சாரம் வருமா?
அதற்குள் எப்படி நுழைவது என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்வி. காரணம், அவ்வாறு குடும்ப
உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து ஒரே இட்த்தில் வசிப்பதற்குரிய வீடுகள் இருக்கின்றனவா?
இல்லையே! மேலும் இன்றை பணிச்சூழலில் ஒரே ஊருக்குள் பணி செய்யும் வாய்ப்புகளும் இல்லை.
ஆளுக்கொரு பக்கமாய் பணிக்குச் செல்லும் சூழல் நிரந்தரமாகிவிட்டது. கூட்டுக்குடும்பமாக
வாழ்ந்த காலத்தில் அவர்களில் யாராவது ஒரு தொய்வு நிலையிலோ, அல்லது திறமையின்றி இருந்தாலோ
அது வெளியே தெரியாவண்ணம் சமாளித்து, அரவணைத்து, அவரையும் அவர் சார்ந்தவர்களையும் சரிநிகராகவே
நடத்துவர். கிராமங்களில் 15 வயது நண்பர்கள் வட்டம் சேர்ந்து விளையாடுவர். அவர்களில் ஒருவருக்கு 7 வயதில்
ஒரு தம்பி இருப்பான். அவனை ஒதுக்கி உட்காரவைத்துவிட்டு தாங்கள் மட்டும் விளையாடினால்
அந்த தம்பிக்கு மனம் வலிக்குமே என அவனை விளையாட்டில் சேர்த்துக்கொள்வர். அவனுக்கு அப்போதைய
பெயர்தான் கைப்புள்ள. அந்த கைப்புள்ள ஆட்டத்தில் எந்த தவறு செய்தாலும் அது கணக்கில்
வராது. ஆனால், தன்னையும் அவர்கள் சரிசம்மாக நடத்துவதாகவே அந்த கைப்புள்ள கருதிக்கொள்வான்.
அதுபோல் தான் கூட்டுக்குடும்பக் கலாச்சாரமும். இன்றைக்கோ, நாளைக்கோ இன்னும் நூறு ஆண்டுகள்
கழிந்தபின்னரோ மனித இனத்தின் எமோஷனுக்கும் சுபிட்சத்திற்கும் கூட்டுக்குடும்பக் கலாச்சாரமே
தேவை. அது இல்லாமல் நாம் எத்தனை ஆயிரம் கோடி சம்பாதித்தாலும் மனமகிழ்ச்சிக்கு நான்
கூறிய அரவணைப்புகளே. வளர்ந்த நாடுகளில் ஏன் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று
எண்ணிக்கொள்கிறோம். நாம் அமெரிக்கா போன்ற நிலையையே அடந்து விட்டாலும் கூட மனமகிழ்ச்சி
இல்லாவிட்டால் நாம் செய்ய முடியும்?
-------------------------------------------------------------