Monday, September 7, 2026

121.புல்லரிப்பதுபோல் நடிக்க முடியுமா? (குறளின் குரல் - 14) அதிகாரம் 8 -அன்புடைமை -குறள் 71

 

புல்லரிப்பதுபோல் நடிக்க முடியுமா? (குறளின் குரல் - 14)

அதிகாரம் 8 -அன்புடைமை -குறள் 71

            திருக்குறள்  உரை வரிசையில் இப்போது நாம் காண இருப்பது 8 ஆவது அதிகாரம் அன்புடமை.

            திருக்குறளின் முந்தைய அதிகாரங்களில் இல்வாழ்க்கை, மனைவி, குழந்தைகள் வந்துவிடுவர். இதன் மூலம் திருவள்ளுவர் மேற்கூறிய மூன்று அம்சங்களும் ஒரு குடும்பம் சார்ந்தது. அதற்கடுத்து குடும்ப உறவுகளைத்தாண்டி வெளியுலகில் அனைவருடனும் எப்படி உறவைப்பேணுவது என்பதை தன் 8 ஆவது அதிகாரமானஅன்புடைமைஅதிகாரத்தில் கூறுகிறார். அடிப்படையில் பொருளுடைமை, அறனுடைமை ஆகியவற்றிற்கும் முன்னரேஅன்புடைமைஎப்படி அமைய வேண்டும் என்பதை வள்ளுவர் கூறிவிடுகிறார். அவர் குறள் அதிகாரங்களை வரிசைப்படுத்திய விதத்தில் மிகச்சிறந்த நுட்பத்தைக் கையாண்டிருக்கிறார் என்பதை எண்ணி அடிக்கடி நான் வியப்பதுண்டு. உலகின் அனைத்து விஷயங்களுக்கும், திருக்குறளில் கூறப்படும் அனைத்து அதிகாரங்களுக்கும் அடிப்படையாக அமைவதுஅன்புடைமைஆகும். ’அன்புஎன்பதுகண்டிப்பில்லாத நேசம் (Unconditional affection)’! ஏழை பணக்காரன், நிறம், ஜாதி, ஏதாவது காரணங்களை (எதிர்பார்ப்பு) முன்னிட்டோ, அதிகாரம் அல்லது செல்வாக்கு என்பதற்காக, புகழ், பிரபலம் போன்ற எதற்காகவும் இல்லாமலோ, மற்றவர்களுக்கு ஒரு துன்பம் என்றால் பலனை எதிர்பாராமல் சென்று உதவக்கூடிய, மற்றவரிடத்தில் அதீத அக்கறை செலுத்தக்கூடிய இயல்பேஅன்புஆகும்.  இந்த நல்லியல்புகளை அன்புடைமை என்கிற அதிகாரத்தில் வள்ளுவப்பெருந்தகை வரிசைப்படுத்துகிறார்.

 அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும். (குறள் 71)

 

            அன்பு என்பதை அடைத்து வைக்கக்கூடிய தாழ்ப்பாள் ஏதேனும் இருக்கிறதா? உண்மையான அன்புகொண்டோருடைய கண்ணீரின் சிறுதுளி அவரது அன்பை வெளிப்படுத்திவிடும் என்பதே இதன் பொருள்.

           

தங்கம், வெள்ளி உள்ளிட்ட எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதனை பாதுகாப்பாக வைக்க அல்லது மறைத்து வைப்பதற்கு நிச்சயமாக ஒரு பூட்டு தேவைப்படுகிறது. இதுவே கோபம் போன்ற உணர்ச்சிகளாக இருந்தால் மனதிற்குள் பூட்டி விடலாம். ஆனால்அன்புஎன்பதை எதனாலும் பூட்டிவிட முடியாது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நிச்சயம் வெளிப்பட்டுவிடும்! அது எப்படி வெளிப்படுத்தும்? சிறு கண்ணீர்த் துளிகூட அந்த அன்பை காண்பித்துக்கொடுத்துவிடும். ’எப்போதுமே நமக்கு முரணானவர் இவர்என்று யாரையாவது எண்ணிக்கொண்டிருப்போம். ஒரு இக்கட்டான தருணத்தில் நாம் எதிர்பாராத விதத்தில் அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பானது சட்டென வெளிப்பட்டு நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும். இதற்கு உதாரணமாக சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் எனக்கு ஏற்பட்ட சொந்த அனுபவத்தை கூறினால் பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.  சிவில் சர்வீஸ் தேர்வினை நான் எழுதுவதற்கும் முன் ஒரு நிறுவனத்தில் நான் பணி செய்துகொண்டிருந்தேன். நான் தங்கியிருந்த இடத்திலிருந்து நிறுவனத்திற்கு ஒரு வேனில் அழைத்துச் சென்று மீண்டும் வந்து இறக்கிவிடும் பணியில் ஒரு டிரைவர் நியமிக்கப்பட்டிருந்தார். நான் அந்த வேனில் அவருடன் பயணித்த காலம் முழுமையுமே அவர்மீது எனக்கு ஈர்ப்பிருந்ததில்லை. அதைவிட அவர் பேசி, பழகும் விதம் எல்லாம் எனக்கு முரண்பட்டவர், எதிர்மரையானவர் என்கிற எண்ன ஓட்டம் எனக்கிருந்ததென்னவோ உண்மை. நான் சிவில் சர்வீஸ் தேர்வை எதிர்கொள்வதற்காக, அந்நிறுவனத்தில் செய்துவரும் பணியிலிருந்து விலகுவதாக தீர்மானித்திருந்த நாள் அது. வழக்கம்போல் நான் வாகனத்தில் ஏறி அமர்ந்ததும், அவரிடம் அதை பேச்சுவாக்கில் தெரிவித்தேன். அதைக்கேட்ட மாத்திரத்தில் சட்டென வாகனத்தை பிரேக் போட்டு நிறுத்திவிட்டார். எனக்கோ மிகுந்த ஆச்சரியம்! அவர்என்ன சார் சொல்றீங்க?’ என அதிர்ச்சியுடன் கேட்டார். அவருடைய அந்த செய்கையும், அதிர்ச்சியும் எனக்கு புதுமையாக இருந்த்து. என் மீது இத்தனைநாள் இவ்வளவு பாசமாக அவர் இருந்திருக்கிறார் என்பதை என்னால் அனுமானம் செய்யாமலேயே இருந்திருக்கிறேன் என்று உணர்ந்தேன்! அதுநாள்வரை அவருடைய அணுகுமுறை எனக்கு நெருடலாகவே இருந்தது. ஆனால், அவர் சட்டென்று போட்ட பிரேக்அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்?” என்பதை எனக்கு நினைவூட்டியது. எங்களுக்கிடையில் பனமோ, வேறெந்த விஷயப்பிணைப்போ இருந்ததில்லை. இருப்பினும், அவருடைய அன்பு, அக்கறை, உணர்வின் வெளிப்பாட்டை 25 ஆண்டுகள் கழித்தும் என்னால் நினைவுகூர முடிகிறது! இதுவே மனித வாழ்க்கைக்கு அடிப்படையானது.

உண்மையான ஆனந்தமோ, சோகமோ எதுவாயினும் கண்ணீரை வெளிப்படுத்தி விடும். திருவள்ளுவர் காலத்தில் கண்ணீருக்கு வேறெந்த வர்ணனைகளும் இருந்ததில்லை. ஆனால், காலப்போக்கில்நீலிக்கண்ணீர்போன்று எத்தனையோ விதமான கண்ணீரில் பலவகை வந்துவிட்டன. ’மகாநடிகைதிரைப்படத்தில் நாயகி ஒற்றைக்கண்ணில் மட்டும் நீர் வருவதுபோல் நடித்திருப்பார். இதை வைத்துப்பார்க்கும்போது கண்ணீரை வைத்து அன்பை அளவிட முடியுமா? என்றால், அங்கே ஒரு கேள்விக்குறி எழும்பி நிற்கிறது! கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் மனிதர்கள் நிறைய நடித்துப்பழகிவிட்டாலும், ஒரு சில விஷயங்களில் இன்னும் செய்ய முடிவதில்லை!  உதாரணத்திற்கு, ‘உடல் புலரிக்கிறது.. மயிர்க்கூச்செரிகிறதுஎன்று நாம் கூறுவதுண்டு. நடிகர்களில் சிவாஜி கணேசனோ, ரஜினியோ, கமலோ புல்லரிப்பதுபோல் நடித்ததில்லை. அப்படி நடிக்கவும் முடியாது என்றே எனக்குத் தோன்றுகிறது. அந்த உணர்வு வெளிப்பாடு மட்டும் இன்னும் நடிப்புக்கலைக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது! ’புல்லரித்தல்என்பது பக்தியில் இருக்கும் அத்துடன் பெரும்மகிழ்ச்சியில் இருக்கும்.  பயத்தில் கூட கூச்செரியலாம். ஆனால், அது இன்றளவும் மனிதர்களால் நடித்துக்காட்ட முடியாத அல்லது நடித்து உருவாக்க முடியாத உள்ளார்ந்த உணர்ச்சியாக (intrinsic emotion) அது விளங்குகிறது.

 

திருவள்ளுவர்அன்புடைமைஎன்று தொடங்கும்போதே, ‘அன்பு உண்மையாக இருந்தால் அது நிச்சயம் வெளிப்பட்டுவிடும்என்கிறார். அவ்வாறு வெளிப்பாடு நடைபெறவில்லையென்றால் அவ்விட்த்தில் உண்மையிலேயே அன்பு இல்லை என்றுதான் பொருள். மனிதர்களிடையே அன்பின் பரிமாற்றம் நிகழ்ந்துகொண்டேயிருக்க வேண்டும் என்பதாகத்தான் அன்புடைமை எனத்தொடங்கும் குறளில் பதிவு செய்திருக்கிறார். அன்பு என்கிற ஒன்று இல்லையென்றால் மனிதர்களை இணைத்துப்பிணைக்கும் வேறெந்த விஷய்மும் இல்லை. வயது வரம்புகளின்றி, பாலின பேதமின்றி, தகுதி, அந்தஸ்து  கடந்தும், திருமணபந்தம், தாய்தந்தையர் தங்கள் குழந்தைகள் மீது பாசம் காட்டுவது, பெற்றோரின் வயதான காலத்தில் அவர்கள் மீது குழந்தைகள் காட்டும் பாசம் ஆகிய அனைத்துமே அன்பு என்கிற வட்டத்தில் அடங்கிவிடும். இந்த அன்பு என்னும் அச்சில்தான் இவ்வுலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது என்பது உண்மையான விஷயம்.

-------------------------------------------------------------

 

120.அன்றைய விருந்தோம்பல் இன்றைக்கு சாத்தியமா? (குறளின் குரல்- 19)

 

அன்றைய விருந்தோம்பல் இன்றைக்கு சாத்தியமா? (குறளின் குரல்- 19)

 

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு.

 

            திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தையும் இன்றைய வாழ்வியல் முறையோடு ஒப்பீடு செய்து வருகிறோம். அந்த வகையில் இப்போது நாம் பார்க்க இருப்பது திருவள்ளுவரின் திருக்குறளில் ஒன்பதாவது அதிகாரமான ’விருந்தோம்பல்’. இதில் முதல் குறளாக வருவது,

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு.

இந்தக் குறளில் விருந்தோம்பல் என்னும் அறத்தை வேளாண்மை என்கிற பொருளோடு காட்டுகிறார். கணவந் மனைவியாக பல இன்னல்களை எதிர்கொண்டு வாழ்வது எதற்காக என்றால், ’விருந்தோம்பல்’ என்னும் வேளாண்மையைச் செய்வதற்குத்தான் என்கிறார் வள்ளுவர். அதாவது ’தங்கள் இல்லத்திற்கு வரக்கூடிய விருந்தினர்களை இன்முகத்துடன் வரவேற்று அவர்களை மரியாதையுடன் வரவேற்று, உணவு, பானங்கள், இன்னும் அவர்களுக்கு விருப்பமான பண்டங்கள் ஆகியவற்றை பரிமாறி, நன்கு  உபசரித்து, ஆத்மார்த்தமாக அளவளாவி, அவர்கள் மனம் மகிழும் வகையில் கொண்டாடி, அன்புடன் வழியனுப்புவதற்குத்தான் ஒரு குடும்பமே வாழ்கிறது’ என்கிற அளவிற்கு விருந்தோம்பலை உயரிய இடத்தில் வைத்துக்காட்டுகிறார். பொதுவாக பிறரை மகிழ்விப்பது மிகவும் நல்ல பண்பே. தத்துவம், மதம், வாழ்வியல் முறை இப்படி எதுவாயினும், நமக்கு பிரச்சினையை இழுத்துக்கொள்ளாமல் இன்னொருவரை மகிழச்செய்வது நல்ல நேர்மறையான விஷயமே. அக்கால தமிழர் மரபில் அதற்கான அமைப்பு எப்படி இருந்தது என யோசித்தோமானால், இந்த விருந்தோம்பலை மிகவும் உச்சநிலையில் அதற்கு மதிப்பு தந்து கொண்டாடியிருக்கின்றனர். ஆனால், இன்றைய அது அப்படியே இருக்கிறதா? நாம் அதனை முறையாக பின்பற்றமுடியுமா? என்பது சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.  

--------------------------------------

 

119.ஒரு ஹெச்.ஆரின் பணி எப்படி அமைய வேண்டும்? (குறளின் குரல் – 19)

 

ஒரு ஹெச்.ஆரின் பணி எப்படி அமைய வேண்டும்? (குறளின் குரல் – 19)

இனிய உளவாக இன்னாத கூறல்

கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.   (குறள்- 100)

 

இது மிகவும் பிரபலமான குறள். ஒரு மரத்தில் கனிகளும் இருக்கினான. காய்கள்ம் இருக்கின்றன. கனிகளை ஒருசிலரும், காய்களை வேறுசிலரும் சாப்பிடுவதுண்டு. பெரும்பாலும் கனிகளைச் சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும். இப்படியிருக்கும்போது, ஏன் காயைச் சாப்பிட வேண்டும்? இதேபோல் நல்ல இன்சொற்கள் இருக்கும்போது, ஏன் வன்சொற்களைப் பேச வேண்டும்? நாம் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு பருவகாலத்தில் (சீஸன்) ஓரு மரத்தில் எல்லாமே கனியாக இருப்பதில்லை. 75%, 50%, 25% என்கிற விகிதத்தில் கனியாகவும், சில காயாகவும், பூக்கள் பூத்திருப்பது போன்ற நிலையில் இருக்கும். எல்லாம் பரவலாக நிறைந்திருக்கும். இதே போல் மனிதர்களின் மனதிலும் இன்சொல், வன்சொல், இரண்டும் கடந்து சமமான தரமுடைய சொற்கள் என மூன்றும் கலந்தே இருக்கின்றன. இவற்றில் இன்சொற்களை மட்டுமே பேச வேண்டும் என்கிறோம். ’ஒரு அலுவலகத்தில் இருக்கிறோம். Hierarchy யாக இருக்கிறோம். திட்டினால்தான் வேலை நடக்கிறது’ எனக் கூறலாம். வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் இருக்கவில்லை. ஒரு சிறிய கட்டமைப்பே இருந்திருக்கும். அவரவர்களுக்கென தனித்தனியான பொறுப்பு அல்லது பதவி இருந்திருக்கும். அவர்கள் தன் பாட்டிற்கு வேலைகளைச் செய்திருப்பர். ஆனால், இப்போது H.R., எப்படி வேலை வாங்குவது?, குறைந்த சம்பளம் கொடுத்து எப்படி வேலை வாங்குவது? போன்ற பல விஷயங்கள்  ஓடிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் எளிதாக வேலை வாங்குவது, கடினமான வேலைகளை அளவீடு செய்வது, குறிக்கோளை நோக்கி ஆற்றுப்படுத்துவது, ஊக்கப்படுத்துவது, அங்கீகரிப்பது, ஊதியம் கூட்டுவது, வேலை சம்பந்தமாக உறுதுணை செய்வது, அவர்களின் பணிக்குரிய மரியாதையைக் கொடுப்பது, போன்றவையே வேலைகள் நன்கு நடப்பதற்கான சூழலை உருவாக்குகின்றன. ஆனால், இவையெல்லாம் நீண்ட காலம் எடுத்துக்கொள்கின்றன. இதனை சரி செய்ய ஊழியர்களைத்திட்டுதல்என்பது கையாளப்படுகிறது. இதுமட்டுமின்றி சில நேரங்களில் கடுமையாகத் திட்டுவதும் உண்டு.  கடுமையாகத் திட்டுவதன் வெளிப்பாடு எப்படி? திரைப்படங்களில் ரெளடிகள், கொலைகாரர்கள் போன்றோர் தங்கள் கூட்ட்த்தைச் சேர்ந்த ஒரு ஆள் தவறு செய்துவிட்டால், உடனே தண்டனை வழங்குவர். இந்த செயலானது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும் என அவ்வாறு செய்வர். திட்டுதலின் அடுத்த படிநிலை இது. இதிலும் முறைப்படியான வேலைகளை ஒரு ஒழுங்கமைப்பிற்குள் கொண்டு வந்து விட்டால், திட்ட வேண்டிய அவசியமும் குறையும். சிலசமயங்களில் கடுமையான வேலைப் பளுவால் இருதரப்பினரும் மன அழுத்தத்துடன் இருக்கும்போது, பணியாளர் வேலை செய்யாமலிருந்தாலோ அல்லது அந்த வேலையை தவறாகச் செய்துவிட்டாலோ அப்போது திட்டுவது என்பது தவறில்லை. ஆக, நிறைய கனிகள் இருக்குமிடத்தில் சிறிதளவு காய் இருந்துவிட்டுப்போகட்டும். இதுவே என்னுடைய பார்வை. ஆனாலும் அப்போதும் கூட வன்சொற்களை தவிர்ப்பது நல்ல மாண்பு எனலாம். 

-----------------------------------------------------

 

 

 

 

 

 

121.புல்லரிப்பதுபோல் நடிக்க முடியுமா? (குறளின் குரல் - 14) அதிகாரம் 8 -அன்புடைமை -குறள் 71

  புல்லரிப்பதுபோல் நடிக்க முடியுமா? (குறளின் குரல் - 14) அதிகாரம் 8 - அன்புடைமை -குறள் 71             திருக்குறள்   உரை வரிசையில் இப்ப...