Tuesday, September 1, 2026

82. குற்றம் செய்ததாக ஒப்பு கொண்டாலும் நீதிமன்றத்தால் தண்டிக்க முடியாது? ஏன்?

 

குற்றம் செய்ததாக ஒப்பு கொண்டாலும்

நீதிமன்றத்தால் தண்டிக்க முடியாது? ஏன்?

 

            இந்தியப் பாராளுமன்ரம், சட்டமன்றங்கள் என எல்லாவற்றிற்குமே தனித்துவமான இறையாண்மை உண்டு என்பதே நம் ஜனநாயகத்தின் சிறப்பு. இந்ந்த நிலையில் சமீபத்தில் நம் தமிழக சட்டமன்றத்தில் இந்நாள் நிதியமைச்சர் திரு.மரியவில்சன் அவர்கள் சட்டமன்றத்தில் உரையாற்றும்போது கடந்த ஆட்சியின்போது, அந்நாளைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மஹேஷ் அவர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக பேசினார். இப்படிப்பேசுவது குற்றமாகாதா? என்று பலரும் கேட்டனர். லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றமே. இதில் சுவாரஸ்சியமான விஷயம் என்னவெனில், அவர் (திரு.மரியவில்ஸன்) சட்டமன்றத்தில் பேசிய பேச்சை வெளியிடங்களில் பேசியிருந்தால் அவரைக் கைது செய்ய வாய்ப்புண்டு. ஆனால், அவர் சட்டமன்றத்தினுள் தான் லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்ததால் அவருக்கு ஒரு பாதுகாப்பு கிடைத்திருக்கிறது. இறையாண்மை என்பது நாம் உருவாக்குவதாகும். இந்திய அரசியல் அமைப்பு எப்படி அதை உருவாக்குகிறது என்றால், இது சம்பந்தமாக ஆர்ட்டிகல் 105 (பாராளுமன்றம்) மற்றும் ஆர்ட்டிகல் 194 (மாநி சட்டமன்றம்) ஆகிய இரண்டு ஆர்ட்டிகல்ஸை நாம் பார்க்க வேண்டும். முதலாவதாக, ’சபையில் ஒரு உறுப்பினர் பேசிய பேச்சிற்காக, அல்லது ஓட்டுப்போட்டார் என்பதற்காக அவர் மீது குற்றம் சாட்டி எந்த ஒரு நீதிமன்றமும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கைகளையோ, வழக்குகளுக்குள் அவரை ஆட்படுத்துவதோ முடியாது’ என்று தெரிவிக்கிறது.  ஆர்ட்டிகல் 19 –இன்படி பேச்சுரிமை சுதந்திரம் என்று அனைவருக்கும், எல்லா இடத்திலும் உள்ளது. சிற்சில கட்டுப்பாடுகளும் உண்டு. அந்த கட்டுப்பாடுகளும் கூட வந்துவிடக்கூடாதென இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. ஏனென்றால், அதுதான் அந்த இறையாண்மையை உருவாக்குகிறது. ’நான் என் தொகுதி மக்களின் பிரதிநிதி. எனக்கு இங்கே பேச்சுரிமை உண்டு. மேலும், நான் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் பரிபூரணமான உரிமை எனக்கு உள்ளது’  என அவையின் ஒவ்வொரு உறுப்பினரும் நடந்து கொள்ளும் வகையில் இறையாண்மைக்காக அரசியல் அமைப்பு வரையறுத்துள்ளது. அந்த உயரிய நோக்கத்தின் அடிப்படியைக்கொண்டுதான் திரு.மரிய வில்ஸன் அவர்கள் பேசிய பேச்சிற்காக அவரை கைது செய்யமுடியாது என முடிவு மேற்கொள்ளப்படுகிறது. உண்மையில் மரியவில்ஸன் அவர்கள் பேசியதை சபைக்குறிப்பில் பதிவு செய்யக்கூடாது. மிகவும் சாதுர்யமாகவும், நன்னிலைப் நோக்குடனும்  நம் சபாநாயகர் திரு. ஜே.சி.டி.பிரபாகரன் அவர்கள் சபையை நடத்திக்காட்டுகிறார். அவர் திரு.மரிய வில்ஸன் அவர்களின் பேச்சை சபைக்குறிப்பிலிருந்து நீக்கியிருப்பார் என்றே நம்புகிறேன். எதிர்கட்சி வரிசையில் இருக்கும் தி.மு.கவோ ’நாங்கள் லஞ்சம் வாங்கவேயில்லை’ என்று மறுத்துப்பேசாமல், ‘வேண்டுமானால் வழக்குப்பதிவு செய்யுங்கள்’ என்று கூறுகிறார்கள். அவர்கள் கூறுவதின் உள் அர்த்தம் என்னவெனில், ‘லஞ்சம் கொடுத்தேன்’ என்று கூறும் உறுப்பினர் மீது முதலில் வழக்குப்பதிவு செய்யுங்கள்’ என்பதுதான்! தமிழக சட்டமன்றத்தில் எனக்குத்தெரிந்தவரை இதுபோன்ற பிரச்சினைகள் இதுவரை எழவில்லை.

 

1998 –இல் பாரதப்பிரதமராக காலஞ்சென்ற நரசிம்மராவ் அவர்கள் பொறுப்பு வகித்தபோது, பாராளுமன்றத்தில் ’ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா’ கட்சியினர் ’பணம் பெற்றுக்கொண்டு வாக்களித்தனர்’ என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. வழக்கு சி.பி.ஐ கைக்குச் சென்றது. ஐந்து நீதிபதிகள் கொண்ட நீதிமன்ற விசாரணை நடைபெற்றது. அப்போது ’ஆர்ட்டிகல் 105 –இன் படி சபை உறுப்பினர்கள் பேசுவதற்கும், வாக்களிப்பதற்கும் சுதந்திரம் உள்ளது. ஒருவேளை அவர்கள் பணம் பெற்றுக்கொண்டுதான் வாக்களித்தனர் என்றாலும் கூட, அதற்காக அவர்கள் மேல்  எவ்வித வழக்கும் பதிவுசெய்யக்கூடாது என்கிற அளவிற்கு பாதுகாப்பு உள்ளது’  என்று தீர்ப்பினை வழங்கிவிட்டனர்.

 

அடுத்து 2024-இல் அதே ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சீதா சோரன், அப்போது நடைபெற்ற ராஜ்ய சபா தேர்தலின்போது, ’சீதா சோரன் அவர்கள் கட்சியின் கொறடா ஆணையை நிறைவேற்றாமல், தனிப்பட்ட சுயேச்சையான ஒரு கட்சியிடம் பணம் பெற்றுக்கொண்டு அந்தக் கட்சிக்கு வாக்களித்து விட்டார்.’ என வழக்குப்பதிவு செய்யப்பட்டது. (இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவ்வாறு மாற்றி வேறுகட்சிக்கு தான் வாக்களிக்கவேயில்லை என்றார். உண்மையில் அதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.) இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது,’ஆர்ட்டிகல் 105 பேசுவதற்கும், வாக்களிப்பதற்கும் முழு சுதந்திரம் அளிக்கிறது. அதற்காக பண்ம பெற்றுக்கொண்டு வாக்களிக்க முடியாது’ என்று கூறியது. ஒருவேளை பணம் பெற்றுக்கொண்டது நிரூபணமாகி, கிரிமினல் வழக்காக மாறிவிட்டால், பாதுகாப்பு அளித்துக்கொண்டிருக்கும் ஆர்ட்டிகல் 105 தானாக வழக்கிலிருந்து வெளியேறியதாகி விடும். ஆக, அவர் மேல் வழக்கைப் பதிவு செய்யலாம்’ என தீர்ப்பு வழங்கியது.

ஜார்கண்ட்டின் அந்த வழக்கிற்கும், தமிழக அமைச்சர் பேசியதற்கும் என்ன வித்தியாசம் என்றால், தேர்தல் பணம் பெற்றுக்கொண்டு சட்டமன்றத்தினுள் வாக்களித்தால் அந்தத் தீர்ப்பு செல்லுபடியாகிறது. ஆனால் ஏற்கனவே லஞ்சம் கொடுத்ததாகக் கூறினால் என்றால் இந்தத் தீர்ப்பு தாக்கத்தை ஏற்படுத்தாது. ஏனெனில் சட்டமன்ற நடவடிக்கைகளுக்காக இதனைச் செய்திருந்தால்தான் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியும். சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினர் ‘’நான் கொலை செய்துவிட்டேன்’ என கூறியிருந்தால், அதை சபாநாயகர் அவைக் குறிப்பிலிருந்து நீக்கி விட முடியும். அல்ல்து ‘இவர் கொலை செய்ததாகக் கூறுகிறார். இதை என்னவென்று விசாரியுங்கள்’என பரிந்துரை செய்ய சபாநாயகருக்கு அந்த அதிகாரம் உள்ளது. அவரைத்தவிர காவல்துறையோ அல்லது நீதிமன்றங்களோ இவ்விஷயத்தில் தனித்துவமாகச் செயல்பட்டு எதையுமே செய்துவிட முடியாது. ஒருவேளை சபாநாயகர் ‘மேற்படி மாண்புமிகு உறுப்பினர் .. இவ்வாறு சொல்கிறார். என்னவென்று விசாரிக்கவும்’ என்று சபாநாயகர் கூறினால், அப்போது காவல் துறை வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது. அப்போது உயர்நீதிமன்றம் தாமாக முன்வர முடியும்.  சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினர் பேசியதை ஆதாரமாகக் கொண்டு காவல்துறையால் நடவடிக்கை எடுக்க முடியாது! அவ்வகையில் இன்றைய சூழலில் திரு.மரிய வில்சன் அவர்களைக் காப்பாற்றுவது சபாநாயகர் அவர்கள்தான். ஆக, சபாநாயகர் பரிந்துரை ஏதுமில்லாமல், எவ்வித ஆதாரத்தையும் திரட்டி வழக்குப் பதிவு செய்யவே முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. அமைச்சர் அவர்கள் பேசியது குறித்து மக்களிடையே மற்றும் பத்திரிக்கைகளில் விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையே ஒரு ஆதாரமாகக் கொண்டு வழக்குப்பதிவு செய்யமுடியுமா? என்றால், அதையும் செய்ய முடியாது. ஏனென்றால் சட்டத்தில் இவற்றிற்கு இடமில்லை! ஒருவர் கேட்டார்: ‘நீங்கள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கி விட்டீர்கள். சரி. ஆனால், சமூக வலைதளங்களில் பரவிய வண்ணம் இருக்கிறதே..’என்றார். அதைத்தடுக்க வேறு வழியில்லை என்று சொல்லப் பட்டது. ஆர்ட்டிகல் 105 கொடுத்த பரிபூரண சுதந்திரமானது, அமைச்சர் திரு.மரியவில்சன் அவர்களைப்பாதுகாக்கிறது. அது மட்டும் இல்லையென்றால், நிலைமை வேறுமாதிரியாகியிருக்கும். இறையாண்மையைப்பாதுகாப்பதற்காக அரசியல் அமைப்புச் சட்டம் கொடுத்திருக்கும் மிகச்சிறந்த விஷயம் ‘ஆர்ட்டிகல் 105’ ஆகும். இதுபோன்ற அம்சம் சர்வதேச அளவிலுள்ள ஜனநாயக நாடுகளில் நிலைத்து நிற்கும்படி அமைக்கப்பட்ட ஒரு விதிமுறையாகும்! ஆகவே, இதில் அமைச்சருக்கு எவ்வித பிரச்சினையுமில்லை என்பதே தெளிவு!

-----------------------------------------------------------

Monday, August 31, 2026

81.நேபாளம் சந்தித்த பேரழிவு ! சீனா காரணமா ?

 

நேபாளம் சந்தித்த பேரழிவு !

           சீனா காரணமா ?


 

            நேபாள நாட்டில் நடந்துள்ள பனிப்பாறை வெடிப்பு, பெருவெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர் அதிபயங்கர தாக்குதல் நடத்தியுள்ளன. மனம் வலிக்கச்செய்யும் கொடூரமான நிகழ்வு அது. பெருவாரியான உயிரிழப்புகள் மட்டுமின்றி, பொருளாதாரச் சீரழிவு, மக்களின் வாழ்வாதாரம் இழப்பு போன்றவை அந்த நாட்டை நிலைகுலையச் செய்திருக்கின்றன. சுற்றுலாத்துறை முடங்கிப்போகும். மலையிலிருந்து அதிவேகமாக கீழிறங்கிய தண்ணீர் கோஷி நதியில் இணைய வந்திருக்கிறது. இது எதனால் நிகழ்ந்தது? என காரணத்தை அறிய முற்படுகையில் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் ஒன்று 4.9 ரிக்டர் அளவில் ஏற்பட்டபூகம்பம்என்று கூறப்படுகிறது. இந்த ரிக்டர் அளவானது அப்படி ஒன்றும் தாக்கம் தரக்கூடியது அல்ல. ஆனால், அதுவே பனிப்பாறைகளுக்குக் கீழே நடக்கும்போது, அது அந்தப்பனிப்பாறைகளின் மீது தாக்கம் காட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சமவெளிப்பகுதியில் ரிக்டர் அளவு 8 –க்கும் மேலே போனால் பாதிப்புகள் கடுமையாக இருக்க வாய்ப்புள்ளது. 5 -பூகம்பத்தின் ரிக்டர் அளவு 5 க்கு அடுத்து 6 என வந்தால், அது ரிக்டர் 5- விட இருமடங்கு பாதிப்பைத் தரலாம் என்றும்,  அதுபோல் ரிக்டர் 6- விட ரிடர் அளவு 7 இருமடங்கு பாதிப்பைத் தரலாம் என்கின்றனர்.  நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தின் அள்வு குறைவு. ஆனால், பனிப்பாறைகள் என்பதால் தாக்கம் அதீதமாக இருந்திருக்கலாம். பொதுவாக மலைப்பிரதேசங்களில் கடல் மட்டத்திற்கு மேலே 15 ஆயிரம் அடிக்கு மேற்பட்டு பனிப்படலம் காணப்படும். அப்படிப்பட்ட இடத்தில் பூகம்பத்தாக்கம் ஏற்பட்டு அதனால் பனிப்படலம் பிளவுற்றால், அதி நீராக உருவெடுத்து, அங்கிருக்கும் தூசி, மண் ஆகிய அனைத்தையும் சேறாக்கி, செங்குத்தாக அதீத எடையுடன் கீழ் நோக்கி வேகமாகப் பாய்ந்திருக்கிறது. (இமயமலை என்பது சீனாவின் எல்லைப்பகுதியில் சாய்வு கோணம் குறைவாகவும், நேபாளம், இந்தியப்பகுதிகளில் செங்குத்தாகவும் காணப்படும்.) அப்படிப்பட்ட செங்குத்தான நிலையில் கீழே கொட்டும் சேற்று வெள்ளமானது அதிகப்படியான சேதாரத்தை விளைவித்திருக்கிறது. அப்படி சேறும் சகதியுமாக வந்த வெள்ளம் மக்கள் வசிப்பிடங்களுக்குள் அதிவேகத்தோடு புகுந்து நாசம் செய்திருக்கிறது. நதிப்படுகையின் இருபுறமும் கட்டியிருந்த வீடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அங்கும் ரியல் எஸ்டேட், இடப்பற்றாக்குறை போன்ற பல காரணங்களால், நாம் கண்மாய்கள், ஏரிகளுக்குள் வீடுகளைக் கட்டுவதைப் போலவே அவர்களும் நதிக்கு உள்ளேயே குடியிருப்புகளைக் கட்டத்தொடங்கிவிட்டனர். அதிகப்படியான சேதங்களுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். புவியியல் ஆய்வுகள், அவற்றின் கூற்றுப்படி இமயமலைப்பகுதியானது பன்னெடுங்காலங்களுக்கும் முன்னர், கடலாக விளங்கியதே! அதனால்தான் இனூம் அவ்வப்போது கடல்நீரில் வாழக்கூடிய மீன் இனங்கள் அங்கே ஃபாசிலாகக் கிடைக்கின்றன. அதனால் அந்த மலைப்பகுதியானது கடினமான பாறை அமைப்புகளைக்கொண்டதல்ல. அங்கெ மண் சற்று இலகுவாகவே இருக்கும். இப்படிப்பட்ட இடத்தில் பெரும் கட்டுமானங்கள், சுரங்கங்கள் அமைப்பது போன்ற அழுத்தம் அதிகம் தரக்கூடிய பணிகளை மேற்கொள்ளும்போது கடும் அதிர்வுகள் எழக்கூடும். அதனால் பாதிப்புகள் மிகையாகலாம். வலுவான மலைப்பாறைகள், இறுக்கமான மண், பாறைகள் கொண்ட சமவெளிகளில் அதிர்வுகளின் தாக்கம் குறைவாக காணப்படும். இப்படி நெகிழ்வுத்தன்மையூள்ள இமயமலைப்பகுதியில்மேகவெடிப்புகாரணமாக திடீரென ஓங்காரமாகப்பெய்யும் பெருமழையினால்  வெள்ளம் ஏற்படும். சில சமயங்களில் புதியதாக நதிகளே உருவாகலாம்! இமயமலை சார்ந்த சீனாவின் எல்லைப்பகுதியில் அவர்களால் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்காக சுரங்கங்கள் அமைப்பது, சாலைகள் அமைப்பது போஒன்ர பணிகளை முன்னெடுத்து வருவதாகச் சொல்கிறார்கள். ஆக, ஒருபுறம் அரசாங்கம், மறுபுறம் மக்கள் என இருதரப்பும் சீர்குலைவிற்கு காரணமாக அமைகிறார்கள். சுமார் 100 ஆண்டுகளுக்கும் முன்னர் வரை காஷ்மீரித்திலிருந்து அஸ்ஸாம், மேகாலயா, அருணாசலப்பிரதேசம் வரையுள்ள இமயமலைப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தொகையானது தோராயமாக 50 லட்சத்திற்கு மேற்பட்டு இருந்திருக்காது. பெரும் கட்டுமானங்கள் இல்லாமல் வீடுகள் எல்லாம் அதிக எடையற்ற எளிய கூரைகளைக் கொண்டதாக இருந்திருக்கும். ஆனால், இன்றைய நிலையில் மக்கள் தொகை தோராயமாக 5 கோடி இருப்பதற்கு வாய்ப்புண்டு. வீடுகள் அனைத்துமே பல அடுக்குகளோடு காங்க்ரீட் கட்டடங்கள்!  சாலைகள், அதீத எடைகள் கொண்ட பாலங்கள் இன்று எண்ணிக்கையில் அதிகம். இவ்வளவு அதிகபட்ச எடையை அந்த மலைதான் தாங்கிக்கொண்டிருக்கிறது. இப்போது வந்த பூகம்ப அதிர்வு மனிதர்களால் வந்ததாக இருக்கலாம். புவியியலாளர்களின் கருத்துப்படி ஓவ்வொரு 100 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் இமயமலையில் நிலஅதிர்வு வரத்தான் செய்யும். அந்தப்பகுதியில் இதுபோன்ற பூகம்பம் வந்து பலகாலங்களாகி விட்டன. அதை முடுக்கிவிடுவதுபோல் நாமும் நடந்து கொள்கிறோம். மறைமுகமான ஆபத்து நிலைமை இன்னும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. பனிப்பாறைகள் உருகுதல், உடைதல், மேகவெடிப்பில் திடீர் அதிகனமழை ஆகியவை ஏற்பட்டால், நம் நாட்டுப் பகுதியில் பீகார்வரையிலும் அதீதமான வேகத்துடன்தான் வரும். அதன்பிறகு நதியில் கலந்து தன் வேகத்தை மெல்ல மெல்ல குறைத்து ஓடிக் கொண்டிருக்கும். அதற்கு இன்னொரு முக்கிய காரனம், இங்கே நதிகளின் அகலம் அதிகம். இந்த இயற்கைப்பேரிடரால் விளைந்த கோரத்தை அரசாங்கம் எப்படி எதிர்கொள்ளப்போகிறது? இது சற்று சவாலான விஷயம் தான். ஏனெனில் சுமார் 5 கோடி மக்களின் வாழ்வினை, அவர்கள் வாழ்வாதராத்தினை புனரமைக்க வேண்டும். அந்த மக்கள் செய்வதறியாது வேதனையில் இருக்கின்றனர். எவ்வளவு இழப்பு ஏற்பட்டிக்கிறது என்பதை சரிவர கண்டுபிடிக்க முடியவில்லை. இதுப்போன்ற நிகழ்வுகளைத் தவிர்ப்பதற்காகவே Ocean rim என்பது போல Mountain rim ஏற்படுத்த வேண்டும். அதாவது எந்தெந்த நாடுகள் எல்லாம் பெருங்கடல் பரப்பில் அமைந்துள்ளனவோ அவை அனத்தும் ஒன்றிணைந்து அந்தக்கடலின் தன்மைக்குத் தக்கவாறு Echological பணியைச் செய்கின்றனர். அதுபோல் இமயமலை சம்பந்தமான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க இந்தியா முன்வர வேண்டும். இமயமலையினைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன. (உலகில் ராக்கி, ஆண்டீஸ் மலைத்தொடரைப் பகிரும் நாடுகள் அதிகம்.) இமயமலையில் எங்கேயோ நடைபெறக்கூடிய தவறுகள் வேறுமூலையில் பிரதிபலிக்கும். ஆகவே நான் கூறும் முன்னெடுப்பு மிகவும் அவசியம். பொதுவாக இமயமலையானது வடத்துருவத்தின் ஆர்டிக்கிலிருந்து வரக்கூடிய Cold current தடுத்து நிறுத்துகிறது என்று பள்ளிப்பாடங்களில் படித்திருக்கிறோம். இமயமலையே இந்திய நாகரீகம், கலாச்சாரம் மற்றும் பல போர்களிலிருந்தெல்லாம் நம்மைக்காக்கிறது.

இமயமலையில் ஏற்பட்ட இந்நிகழ்வு எல் நினோ தாக்கத்தாலா? என்பதை இனிமேல்தான் பகுத்தாய்வு செய்வார்கள். எல் நினோ என்பது ஜாதக்கட்டங்களில் ராகு- கேது கிரகங்கள் போல. மற்ற எல்லா கிரகங்களுக்கும் தனித்துவமான செயல்பாடுகள் உண்டு. ஆனால், ராகுவும் கேதுவும் இருப்பதை கூட்டி விடுவார்கள் அல்லது குறைத்து விடுவார்கள். பாஸிட்டிவை நெகட்டிவாகவும், நெகட்டிவை பாஸிட்டிவாகவும் மாற்றிவிடுவார்கள். இதுபோலவே எல்நினோவும். இயல்பான தட்பவெப்பத்தைக் கூட்டியோ அல்லது குறைத்தோ விடுவர். இமயமலையில் நிகழ்ந்த இந்த சம்பவம் பாதிப்பு அதிகம் தராத பூகம்பத்தால் என்பதுடன் மனிதத் தவறுகளும் காரணம். இந்தியாவில் மிக ஆபத்தைத்தரக்கூடிய வேறு மலைத்தொடர்கள் என்றால் ‘அவ்வாறு இல்லை’என்றே கூறலாம். நம் மேற்குத்தொடர்ச்சி மலை மிகவும் வலுவான மலைத்தொடராகும். இது மிகப்பழங்காலத்தில் எரிமலை வெடிப்பினால் உருவானதாகும். இங்கே நிகழும் நிலச்சரிவுகளுக்கு மனிதத் தவறுகளே 100% காரணம். ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே தொடர்ந்து நடக்கும். அதை கணித்து வைத்திருப்பார்கள். இதேபோல் எல்லாவற்றையும் கணித்துவிட முடிவதில்லை. மனிதர்கள் உருவாக்கும் வளச்சியானது குறுகிய காலத்திற்கானதாக இருக்கக்கூடாது. 1000 ஆண்டுகளுக்கும் மேற்பட்டும் பாதுகாப்பான நன்மை தருவதாக இருக்க வேண்டும். நம்முடைய வளர்ச்சி என்பதுடன் சுற்றுச்சூழலையும் பேணவேண்டும். என்னுடைய குரு நீலகண்ட நம்பூதிரி அவர்கள், ‘என்றைக்கு இளநீருக்குள் உள்ள தண்ணீர் கெட்டுப்போகிறதோ … அன்றைய தினம் நம் வளர்ச்சியானது உச்சகட்ட சேதாரத்திற்கு சென்றுவிட்டதாகப் பொருள்’ என்று கூறியதுதான் நினைவிற்கு வருகிறது.

-----------------------------------------------------------

  

 

 

82. குற்றம் செய்ததாக ஒப்பு கொண்டாலும் நீதிமன்றத்தால் தண்டிக்க முடியாது? ஏன்?

  குற்றம் செய்ததாக ஒப்பு கொண்டாலும் நீதிமன்றத்தால் தண்டிக்க முடியாது ? ஏன் ?               இந்தியப் பாராளுமன்ரம், சட்டமன்றங்கள் என எல்...