பண்பட்ட தமிழ் சமூகத்தை உடைத்தது
யார்??
கேள்வி:
சமீபத்தில் கோவையில் ஒரு கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் குறித்து மாநிலங்களவை உறுப்பினர் திருமதி.கனிமொழி அவர்கள் குறிப்பிடுகையில்
‘நம் சமூகம் பண்பட்ட சமூகமாக மாற வேண்டும்’என்கிற கருத்தினை முன்வைத்திருக்கிறார். இது சம்பந்தமான தங்கள் பார்வை என்ன?
பதில்;
’ஒரு பெண் நள்ளிரவில் நிறைய ஆபரணங்களை அணிந்து கொண்டு தனிமையில் நடந்து சென்றாலும் பாதுகாப்பாகச் சென்று சேர்கிறாளோ அன்றைக்குத்தான்
பூரண சுதந்திரம் பெற்றதாகப் பொருள்’ என்று மகாத்மா காந்தி கூறியிருந்தார்.
இன்றைக்கு நள்ளிரவில் கூட இல்லாமல், பட்டப் பகற்பொழுதில் கூட தனியாகச் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.
ஒரு ஆணைப்பொறுத்தவரையில்
பலம் கொண்டவன் பலமில்லாதவன் என்று கூறுகிறோம். ஆனால், பொதுவாக சமுதாயத்தில் பணம் உள்ளவன் பலசாலி என்றும், பணமில்லாதவன் பலவீனமானவன் என்றும், நிலபுலன்கள் உடையவன் பலசாலி என்றும், அது இல்லாதவன் பலமில்லாதவன் என்றும், முதலாளி பலசாலி, தொழிலாளி பலவீனன் என்றெல்லாம் வர்க்க ரீதியிலான பேதங்கள் காணப்படுகின்றன.
ஆனால், ஒரு பெண்ணைப்பொறுத்தவரையில், அவள் பணம் படைத்தவராகவோ அதிகார பலம் மிக்கவராகவோ, ஒரு மருத்துவராகவோ, மெத்தப்படித்த கல்வியாளராகவோ இருந்தாலும் கூட ‘இது போல் பலவந்தத்திற்கு’
ஆளாகும்போது அங்கே அவர் பலவீனமாகி விடுகிறார்கள்.
நடிகரும் பத்திரிக்கையாளருமான
காலஞ்சென்ற ‘சோ’ அவர்கள் ஒரு நாவலில் எழுதியதுபோல் மிகச்சாதாரணமான, படிப்பறிவில்லாத
முரடன் ஒருவனின் முன்னால் ஒரு பெண் எத்தகையவள் என்றாலும் அவள் பலவீனமாக நின்று விடுகிறாள். ’பலவந்தப்படுதல்’
என்கிற விஷயத்தில் பெண்கள் உடல்ரீதியாக பலவீனமானவர்களாக
இருக்கிறார்கள் என்பது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஆகவே இது சம்பந்தமாக அவர்களுக்கு பாதுகாப்புத்தர வேண்டியது நமது அரசு அமைப்பின் (Government System) வேலையாகும். எங்கெல்லாம் இந்த பாலியல் பலவந்தமானது எண்ணிக்கையால் அதிகமாகிறதோ அங்கெல்லாம் அரசு அமைப்பு பலவீனமாக இருக்கிறது என்றே பொருள். கனிமொழி அவர்கள் கூறியது போல் ’சமூகம் பண்படவில்லை’ என்றுதான் கூறமுடியும். சமூகத்தை சரிசெய்யவேண்டியது
யாரென்றால் அதுவும் அரசாங்கம் தான். சமூகம் என்ரால் என்ன? ஆண்களும் பெண்களுமான பல்வேறு தனிமனிதர்களை ஒன்றிணைத்த்துதான்
சமூகம். அவர்கள் குழந்தையாக இருந்தபோது, அவர்கள் குடும்பத்தினர் சொல்லியிருக்கலாம். அடுத்து வளரும் பருவத்தில் பள்ளியில் சொல்லியிருக்கலாம். பணிக்குச் சென்றபின் அலுவலகத்தில் சொல்லலாம். அதுவே எல்லா நேரத்திலும் யாரால் சொல்ல முடியும்? அரசாங்கமே சொல்ல முடியும். ஆக, சமூகத்தின் பண்பாட்டை இனி வரும் காலங்களில் அரசாங்கமே இயக்க முடியும். ஒரு காலத்தில் மதங்களின் பங்களிப்பு இருந்தது. பள்ளிகளின் பங்களிப்பு இருந்தது. பெற்றோர்களுக்கு
இருந்தது. எனக்குத்தெரிந்து
இன்றையகாலக்கட்டத்தில் ஏற்கனவே நான் கூறிய அனைவரின் பங்களிப்புமே வெகுவாக குறைந்துவிட்டது.
எல்லோரின் பங்களிப்பையும் செம்மைப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கே
இருக்கிறது. அரசாங்கமே சமூகத்தைப் பண்படுத்த வேண்டும். ‘நாங்கள் ஏதோ சட்டங்களை இயற்றுவோம். ஒருவன் குற்றம் இழைத்துவிட்டான்.
ஆகவே அவனைச் சுட்டுவிடுவோம்’ என்பது ஒரு நல்ல விஷயமில்லை. அவர்கள்தான் சமூகத்தை எப்படி பண்படுத்த வேண்டுமென்பதைக் கூற வேண்டும். கோவையில் பாலியல் குற்றத்தில் ஈடுப்ட்டவனை காவல்துறை சுட்டுப்பிடித்தது பாராட்டப்பட வேண்டிய விஷயமாகும். ஆனால், அந்த மூன்று நபர்களுக்கும் இந்த குற்றத்தைச் செய்யக்கூடிய தைரியம் எங்கிருந்து வந்தது? நான் அறிந்த வகையில் அந்த இளம்பெண்ணுடன் ஒரு ஆண் நண்பரும் இருந்திருக்கிறார். அவரை வெட்டி காயப்படுத்திவிட்டு
அந்த இளம் பெண்ணை பலவந்தப் படுத்தியுள்ளார்கள். இதெல்லாம் முன்பொரு காலத்தில் வட இந்தியாவில் இருந்த கலாச்சாரம்.
1990 களுக்கும் முன்பு தமிழகத்தில் நடைபெற்ற கற்பழிப்பு சம்பவங்களில் கற்பழிப்பு சம்பவங்களில் ஒரே ஒரு ஆண் தான் சம்பந்தப்பட்டிருப்பார். பொதுவாக கற்பழிப்பு சம்பவங்களில்
A1, A2, A3, A4, A5 என்பதெல்லாம் குறிப்பாக பீகார், உத்திரப்பிரதேசம் மாடலாகும். தமிழ்க் கலாச்சாரத்தில் (பொதுவாகவே தென்னிந்தியக் கலச்ச்சாரத்தில்)
இவ்வாறு இருந்ததில்லை.
இங்கே ஒருவன் தவறு செய்யப்போவதாகத்
தெரிந்தாலே இன்னொருவன் தடுத்திருப்பான். இப்படிப்பட்ட கலாச்சாரம் எதனால் வருகிறது? இதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு இருக்கிறது? இனி சமூகத்தை கைகாட்டி விட்டு அரசு பின்வாங்க முடியாது. ஏனெனில் சமூகத்தைப் பண்படுத்த வேண்டிய வேலை அரசாங்கத்தினுடையதாக
இருக்கிறது.
கேள்வி:
அரசு கல்வியைத்தந்துவிட்டது. வேலைவாய்ப்பைத் தந்துவிட்டது. சமூகப்பாதுகாப்பு
தந்து விட்டது. இதற்கும் மேல் ஒரு அரசாங்கம் என்ன செய்துவிட முடியும்?
எல்லாமே கொடுத்தாகிவிட்டது
என்கிறீர்கள். ஒருவருக்கு உணவுதந்தாகி விட்டது என்கிறீர்கள். ஆனாலும், ஒருவர் தனக்கு, ‘பசி’என்கிறார். அப்படியானால் அவருக்குத்தேவையான
உணவைத் தரவில்லை யென்று பொருள். கல்வியில் தொழிற்கல்வியை தந்துள்ளீர்கள். ஆனால், சமூகக் கல்வியைத் தரவில்லை. ஆணுக்கும் பெண்ணுக்குமான பாலியல் கல்வியை இனி யார் சொல்லித்தருவர்?
அம்மா, சித்தி, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மைத்துனர், தம்பி, அண்ணன் என்கிற உறவுமுறைகளையெல்லாம் உடைத்து சமூகமாக இருக்கக்கூடாது என்று செய்துவிட்டீர்கள். ஒரு காலத்தில் ’குலங்கள்’ அந்த வேலையைச் செய்துகொண்டிருந்தன. ‘(ஜாதி’என்றால் தவறாகப் பொருள் கொள்ளப்படும்.) அந்த குலங்களே தங்கள் வாரிசுகளுக்குத் தேவையான அனைத்து வகையான சமூகக்கல்வியை கற்றுத் தந்தவண்ணம் இருந்தன. நாம் வளர்ந்த காலத்தில் பாலியல் சம்பந்தமான விஷயங்களை நமது பெற்றோர் கற்றுத்தந்திருக்க மாட்டார்கள். நம் மாமன் வகையில் யாரோ ஒருவர் நம்மோடு உரையாடும்போது இந்த விஷயத்தையும் கேளிக்கையாக பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும்
இருந்திருப்பார். அந்த உரையாடலின் ஊடே எது சரி? எது தவறு? என்பன போன்றவற்றையெல்லாம்
கிண்டலாக தெளிபடுத்தியிருப்பார். இன்றோ, நகரங்கள் மற்றும் மாநகரங்களில் அது போல் ஒரு மாணவனுக்கோ அல்லது மாணவிக்கோ கற்றுத்தர எவருமேயில்லை. சாதாரண வகையில் எளிய சந்தேகத்திற்கான விடைகளைக் அளிக்க்க்கூடிய ஆட்கள் எவருமில்லை. சமூக வலைதளங்களே அனைத்தையும் கற்றுத்தருகின்றன.
சமூக வலைதளங்களில் சமுதாயத்திற்குத் தேவையான அரோக்கியம் மற்றும் சத்து தரக்கூடிய உணவுக்குறிப்புகளை பார்த்துள்ளீர்களா? பார்த்திருக்க மாட்டீர்கள். பொதுவாக அங்கே விளம்பரங்களில் நன்கு வறுக்கப்பட்ட கோழிக்கால் பற்றி வேண்டுமானால் வரக்கூடும். எதைக்காண்பித்தால் அதிகம் ஈர்க்கப்பட்டு கவனிப்பார்களோ அதேவேளையில் அவர்களுக்கு அதிக வருமானத்தை ஈட்டித்தருமோ அதைத்தான் அதிகமாக முன்னிறுத்துவார்கள். சமூக வலைதளங்கள் அப்படித்தான் காட்டும். ஆக, இதுபோன்ற விஷயங்களைக் கற்றுத்தர வேண்டியிருப்பதும்
அரசாங்கத்தின் வேலை. சமூகக்கல்வியில் இவையெல்லாம் வருகின்றன. நீங்கள் வேலை வாய்ப்பினைத் தருகிறீர்கள்.
அதனுடனே ‘டாஸ்மாக்’கையும் தந்து விட்டீர்கள்! விஞ்ஞானம் என்ன சொல்கிறது? மதுவருந்தினால் பெருமூளை வேலை செய்யாது. சிறுமூளைதான் வேலைசெய்யும் என்று! இதுதான் உண்மை. மூன்று ஆண் நண்பர்கள். அடிப்படையில் அவர்கள் உள்ளூற கெட்டவர்கள். அவர்கள் பயணிக்கும்போது நேரமற்ற நேரத்தில்
(Untime) ஓரிடத்தில் ஒரு பெண் இருக்கிறார். நான் ஏன்
untime என்கிற வார்த்தையைக் குறிப்பிடுகிறேன் என்றால், பெண்களைப்பொறுத்தவரையில் எவ்வளவு செல்வாக்கு இருந்தாலும், எவ்வலவு பணம் இருந்தாலும் அவர்களுக்கு எதிரான பாலியல் ரீதியான தாக்குதல் விஷயத்தில் இயல்பாகவே உடல்ரீதியில் பலவீனர்களாக இருக்கிறார்கள், இந்த உண்மையை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு விதிவிலக்காக ஒரு சில பெண்கள் பலசாலிகளாகவும் இருக்கக்கூடும். இப்படி உடல் ரீதியில் மென்மையாகவும், பலவீனர்களாகவும்
இருப்பதை சமநிலையில் சரிகட்டுவதே நம் கலாச்சாரக் கட்டமைப்பு. ஒரு பெண்ணின் பாதுகாப்பு கருதி கொண்டுவரப்பட்டதுதான் திருமணம் என்கிற விஷயமே! இப்படிப்பட்ட திருமண பந்தத்திற்குள் காதல், எமோஷன் போன்ற எல்லாமே உள்ளடங்கியிருப்பதுதான். ஒரு ஆண் ஒரு பெண்ணை எவ்வகையிலும் பலவந்தப்படுத்திவிடக்கூடாது என்பதை கண்ணும் கருத்துமாக கட்டிக்காப்பாற்றவே நம் கலாச்சாரத்தின் பல்வேறு கூறுகளுமாகும். தமிழகத்தில் வாழும்‘தோடர்’, அஸ்ஸாமில் ‘காசி’ போன்ற பழங்குடியினரிடத்தில் நான்கு ஆண்கள் ஒரே பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் கலாச்சாரம் உண்டு. அந்த நால்வருக்குமே அந்த மனைவியிடத்தில் சரி சமமான உரிமை உண்டு. அவ்வாறு இருக்கும்போது தன் மனையுடன் ஒரு கணவர் வீட்டினுள்ளே இருக்கிறாரென்றால், அந்நேரம் அவர் தன் வருகையைப் பிற கணவர்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு, தன்னுடைய வில்,அம்பு, செருப்பு அல்லது ஏதாவது ஒரு தாவரம் போன்றவற்றை வீட்டு வாசலில் வைத்துவிடுவது வழக்கம். இதைப்பார்க்கும் பிற மூன்று கணவர்களும் ‘எனக்கும் சம உரிமை இருக்கிறது’என்று அவர்கள் அந்த வீட்டினுள் செல்லக்கூடாது. அந்த நேரத்தில் அந்த மனைவி தனக்கு அப்போது யார் தேவையென்பதை அவளே தெரிவு செய்கிறார். இதுதான் தெளிவான கலாச்சாரக் கட்டமைப்பு. மாநில அதிகாரத்தில்,
மாநில காவல்துறை அமைப்பு, மாநிலத்தின் நீதிமன்ற அமைப்பு ஆகிய அனைத்திலுமே, அந்த பெண் பலவீனமானவளாக இருக்கிறாள், அவளை பலவந்தப்படுத்திவிடக்கூடாது என்று அவளை காக்க வேண்டும். அதேவேளையில், ஒரு பெண்ணாகப்பட்டவள்
எப்பொழுதுமே மாநில நிர்வாகத்தையே நம்பிக் கொண்டிருக்கக் கூடாது. சமீபத்தில் திருவண்ணாமலையில் ஒரு ஆந்திர பக்தைக்கு இரண்டு போலீஸ்காரர்களே பாலியல் பலவந்த சம்பவத்தை நிகழ்த்தினர்.
’வேலியே பயிரை மேய்கிறது’ என்கிற ரீதியில் செய்யப்பட்ட அலோங்கோலத்தை நிச்சயம் எவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அப்போது அங்கே பொறுப்பில் இருந்த ஒரு சிறப்பான அதிகாரி அந்தப்போலீஸ்காரர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்துவிட்டார். ஆக, அந்த விஷவேலிகள் அடியோடு எரிக்கப்பட்டுதான்
ஆகவேண்டும். மாநில அரசு பாதுகாப்பு தந்துகொண்டுதான் இருக்கிறது. அவர்களுக்கு சற்று காலவகாசம் தாருங்கள். பெண்கள் எல்லோருமே ’இரவு 12 மணிக்கு மேல் சுதந்திரமாகத்தான்
வெளியே வலம் வருவேன்’ என்றால் இவர்கள் எத்தனை பேருக்கு தனித்துவமான பாதுகாப்பு தந்துவிட முடியும்? உதாரணத்திற்கு சென்னையில் 1 கோடி மக்கள் தொகையில் சுமார் 10 லட்சம் இளம்பெண்கள் என்றால், அவர்கள் அனைவரும் ’சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை
(E.C.R), பழைய மகாபலிபுரம் சாலை (O.M.R), காஞ்சிபுரம் சாலை போன்ற பகுதிகளில் நாங்கள் அர்த்த ஜாமத்தில் நடந்து கொண்டுதான் இருப்போம்’ என்றால், பாதுகாப்பு தந்துவிட முடியுமா? அத்தகைய தருணங்களில், ஏதோ ஒரு பிரச்சினை ஏற்பட்டு அசாதாரணமான சூழல் ஏற்பட்டு விடுகிறது. ஏழு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வரவேண்டிய பெண் வர இயலாத நிலை ஏற்பட்டுவிட்டால்
அந்த பெண்ணை எப்படியாவது காத்துவிடுகிறார்கள். இதை பெண்களும் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், இவ்வளவு பிரச்சினைகளுக்குப்
பின்னரும் இன்னும் பெரும்பாலான பெண்களுக்கு சிறிது கூட பயம் வரவில்லை. அந்த சிறிதளவு பயம் கூட ‘டாஸ்மாக்’ தயாருப்புபானத்தை
அருந்திவிட்டால் அறவே போவிடுகிறது போலும்! அமெரிக்காவில் மது அருந்திய பின்னரும் கூட ஒருவன் பாலியல் பலவந்தம் விஷயத்தில் தவறிழைக்க மாட்டான். ஏனெனில் அங்கே அமைப்பு அவ்வளவு வலுவாக உள்ளது. அவன் தப்பிக்கவே முடியாது. ஆனால் நாம் இன்னமும் அமைப்பு விஷயத்தில் மிகவும் பலவீனமாக உள்ளோம். இதற்காக இங்கே ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்களை குறைகாண்பதாகச் சொல்லக்கூடாது.
நமது அமைப்பே அப்படித்தான் என்றாகிவிட்டது.
மக்களுக்கு இன்னும் பயம் வரவில்லை. இன்னும் சொல்லப்போனால்,
நம்மைவிட பல மடங்கு அளவிற்கு பீகார் இன்னும் பின் தங்கியுள்ளது.
கேள்வி:
இதற்கெல்லாம் ’கலாச்சார ரீதியிலான கட்டுப்பாடுகள் தேவையில்லை’
என்று ஆனதாலா?
பதில்: ’நம் சமூகம் பண்பட்ட சமூகமாக மாறவேண்டும்’ என்று கூறிய பாராளுமன்ற உறுப்பினர் கலாச்சாரத்தினை நம்பாதவர். எதிலும் விஞ்ஞானம் என்கிற ரீதியில் அணுகக்கூடியவர். கலாச்சாரம் என்றாலே அது இந்து கலாச்சாரம்தான்.
அப்படியென்றால், அது தொன்மையான சங்ககாலத்திலிருந்து
தொடர்ந்து பின்பற்றப்பட்டுவருவதுதான். ஆக, அவர்கள் இவையெல்லாவற்றையும்
மறுதலிக்கிறார்கள் என்றே என்னால் காண முடிகிறது. அவர்கள் கொள்கைக்கு ஒத்துவராத,
1000, 2000 வருடங்களாக அது நல்ல விஷயங்களாக இருந்தாலும் கூட மறுத்துவிடுகிறார்கள். திராவிடத்தின் பாதையில் எல்லாவற்றையும்
எதிர்க்கிறார்கள் என்பதே என் பார்வையாகும். நீங்கள் சில அம்சங்களை உடைக்க முற்படும்பொழுது
ஏற்படும் எதிர்வினைகளைக் கண்டு வருகிறோம். நமது அமைப்பு (System) சரியாக இருக்கிறதென்றால், குற்றங்கள் நிகழாது. காவல்துறையும் நீதிமன்றமும் தங்களுக்குள்
சிறப்பாக பொருந்தி விட்டால், இது குறித்து செய்தி அந்த குற்றவாளிக்கு தெரிந்துவிட்டால், அவனுக்கு பயம் ஏற்படும். அதன்பின் அவனால் குற்றங்கள் ஏதும் நிகழாது. அந்த பயம் வரவில்லையென்றால் அவன் தன்
குற்றச்செயல்களைத் தொடரத்தான் செய்வான். ஆக நாம் மூன்றுவிதமான கோணங்களில் பார்க்கிறோம். சமூகம் பண்பட சமூகம் செய்யவேண்டியதை
அதுதான் செய்யவேண்டும். சமூகத்தின் பிற அமைப்புகளைவிட அரசுக்கும் பெரும்பங்கு இருக்கிறது. அடுத்ததாக பெண்கள் புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், அவர்களின் சுதந்திரம் என்பது கலாச்சாரமும், அரசும்தான் தருகின்றன. ஆனாலும்
அரசிற்கு ஒரு எல்லை இருக்கிறது என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் சுதந்திரத்தை மிக்க்குறைவாக தங்களுக்கு தேவையான அளவிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆணும்
பெண்ணும் சரிநிகர் சமம் என்னும் அம்சத்தை பெண்கள் இத்தகைய தருணங்களில் பயன்படுத்தக்கூடாது. அவர்கள் சரிநிகர்
சமமானவர்கள்தான் என்பதை வேலைவாய்ப்பு, தொழில், அரசியல் மற்றும் வாழ்க்கையியல் போன்றவற்றில்
நிச்சயம் பயன்படுத்தலாம். அவர்கள் மிகவும் பாதுகாப்பாக வாழ்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால், நாம் மேலே குறிப்பிட்ட அசாதாரண சூழல்களில் பயன்படுத்த பிடிவாதம் காட்டக்கூடாது
என்பதே என் கருத்து. அரசு சில விஷயங்களை சரிவர செய்யாமல் போனாலும் அவற்றை சீராக்க,
கலாச்சார ரீதியாக பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் போன்ற நிறுவனங்கள் பணிகளை மேற்கொள்ள
வேண்டியுள்ளது. ஓட்டு போட்டு மாநில நிர்வாகத்தைத் தேர்ந்தெடுத்துளோம். 10 லட்சம் கோடி
பட்ஜெட் கொடுத்துள்ளோம். அவர்களே செய்யட்டுமென விலகி இருக்காமல் நாமும் முன்கூறியபடி
செயல்பட வேண்டும். இவை அனைத்தும் செம்மையாக செயல்பட்டால்தான் பெண்களுக்கான பாதுகாப்பை
நாம் பேணிக்காக்க முடியும்.
----------------------------------------------------------------
No comments:
Post a Comment