DECISION
MAKING SKILL
கேள்வி:
யுபிஎஸ்ஸி நேர்முகத்தேர்வில் ‘இக்கட்டான தருணங்களில் சரியாக முடிவெடுக்கும் திறன்’ பற்றி கேள்விகள் கேட்கப்படுமா?
பதில்:
நிச்சயமாக கேட்கப்படும்.
இதனை ‘சூழ்நிலைகள் அடிப்படையிலான கேள்வி’ என்று கூறுவோம். நேர்முகத்தேர்விற்கு வந்திருப்போரைப்பார்த்து, தேர்வாளர்கள் ஒரு பிரச்சினையைக்கூறி, ‘நீங்கள் ஒரு மாவட்ட்த்தின் ஆட்சியராக இருந்தால், இந்தப் பிரச்சினையை எப்படி கையாள்வீர்கள்?’
என்று கேட்பார்கள். இது போன்று கேட்பதற்கென்றே ஒவ்வொருவருக்கும்
பிரத்யேகமாக பல தகவல்களைத் திரட்டி வைத்திருப்பார்கள். ஒருவர் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்று நேர்முகத்தேர்வு
வரை செல்கிறார் என்றால், நிச்சயமாக அவருக்கு மிகப்பெரிய கனவு இருந்திருக்கும்.
அந்த கனவிற்குப் பின்னால் தன் பள்ளிப்பருவத்தின் போதோ அல்லது கல்லூரிப்பருவத்தின்
போதோ நடைபெற்ற(தான் கண்ட பிரச்சினை) ஏதோ ஒரு சம்பவமும் காரணமாக இருக்கலாம். அப்படி இருக்கும்போது அவர் மாவட்ட ஆட்சியரானவுடனே தான் கண்ட பிரச்சினையைத் தீர்க்க முயற்சிக்கலாம். உதாரணத்திற்கு கூற வேண்டுமானால்,
குடிதண்ணீர் கிடைக்காமல் அவதிப்படும் பகுதிகலிலிருந்து
வந்தவர், நேர்முகத்தேர்வில்
கேள்வி கேட்கப்படும்போது,
தான் மாவட்ட ஆட்சியரானால், ‘தன் பகுதியில் மக்கள் குடிதண்ணீருக்கு அவதிப்பட்டு அலையாமல் 50 மீட்டர் தொலைவிற்குள் தண்ணீர் பிடித்துக்கொள்வதற்கான வசதியை’ ஏற்பாடு செய்துதர வேண்டும் என்பதே அவரது பதில்லாக இருக்க முடியும். ஒருவேளை அவர் பள்ளிப்படிப்பிற்காக
சுமாராக 8 கிலோ மீட்டர் தொலைவு சைக்கிளில் சென்று வந்தவராக இருப்பின், தான் ஆட்சியராகப் பொறுப்பேற்ற பின் ’1 கிலோ மீட்டர் தொலைவிற்குள் ஒரு பள்ளியை நிறுவ முயற்சிப்பேன்’ என்று கூறுவார்.
சில நேரங்க்ளில் நடப்புச் சூழ்நிலை சம்பந்தமாகவும் கேள்விகள் கேட்கப்படலாம். உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் நடைபெற்ற ‘ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட்த்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு’ சம்பந்தமாக, அப்போது ‘நீங்கள் மாவட்ட ஆட்சியராக இருந்திருந்தால் கலவரத்தைக் கட்டுபடுத்த என்ன வகையான நடவடிக்கையை மேற்கொண்டிருப்பீர்கள்? ’ என கற்பனையாக கேட்கப்படுகிறது
என்று வைத்துக்கொள்வோம்.
இந்த கேள்விக்கு சரியான விடையைத் தெளிவாகக்கூற, ‘ஸ்டெர்லைட் ஆலைப்பிரச்சினை’ சம்பந்தமான முழு விவரங்களையும் துல்லியமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
‘பிரச்சினை வெடித்தபோது மக்கள் கூட்டம் முதலில் எங்கே சென்றது?’
’ஆலையை நோக்கிச் சென்றது’ என்று பதிலளித்தபின், தொடர்ந்து ஆலைக்குச் சென்ற மக்கள் கூட்டம், ஏன் பின்னர் கலெக்டர் அலுவலகம் நோக்கிச் சென்றது? அவ்வளவு பெரிய ஜனத்திரள் ஒன்றாகக்கூடுவதற்கு
காவல்துறை அனுமதி அளித்தது? அது எவ்வாறு கலவரமாக வெடித்தது? துப்பாக்கிச்சூடு
நடத்த காவல்துறை ஏன் முடிவெடுத்தது?
துப்பாக்கிச் சூடு நடத்திய விதத்தில் என்னென்ன தவறுகளைச் செய்தனர்?’ என்கிற அனைத்து விவரங்களையும் விரல்நுனியில் வைத்திருந்ததைக்
கூறி, ’தான் அங்கு மாவட்ட ஆட்சியராக இருந்திருந்தால்,
அந்தப்பிரச்சினையை எப்படி எதிர்கொண்டிருப்பேன்? சூழ்நிலை விபரீதமாகாமல் தடுத்திருப்பேன்’
என்றெல்லாம் விவரித்து பதில் கூறினால், அது சிறப்பாக அமைந்திருக்கும்.
நான் யுபிஎஸ்ஸி நேர்முகத்தேர்விற்காக சென்றபோது, ‘காட்டிற்குள் சென்று வீரப்பனைப் பிடிப்பதற்காக அனுப்பப்பட்டிருந்தால், என்ன செய்திருப்பீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. (அந்த நேரத்தில் வீரப்பன் என்கவுண்டர் செய்யப்படவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது!)
முதலில், ‘காட்டைப் (காடு) பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? விரைவாக எப்படித் தெரிந்து கொள்வீர்கள்? உங்களுக்கான குழுவை எப்படி ஒருங்கிணைப்பீர்கள்? வீரப்பனைத் தேடும் பணியை பகலில் மேற்கொள்வீர்களா?
அல்லது இரவு நேரத்திலா?’ என்றெல்லாம் கேட்கப்பட்டன.
வீரப்பனின் நடமாட்டம் இரவு நேரத்தில்தான் என்றும், மிருகங்கள், பறவைகளின் ஒலியைக் கொண்டுதான் மற்றவர்களின் நடமாட்ட்த்தைக் கணிக்கிறார்’ என்றெல்லாம் சில குறிப்புகளை ஏற்கனவே படித்திருந்த செய்தி என்னிடம் இருந்தது. இப்படிப்பட்ட நடைமுறை உண்மைகளைக் கொண்டு, சமயோசிதமாக கணித்து, முடிவுகளை எடுப்பேன் என்பதை விவரித்தேன்.
அதேபோல் இன்னொரு நண்பர் கூறிய நேர்முகத்தேர்வில்
நடைபெற்ற சுவாரஸ்யமான அனுபவத்தையும் இங்கே குறிப்பிட எண்ணுகிறேன். அதில் நேர்முகத்தேர்வினை எதிர்கொள்ளச் சென்றவரிடம், தேர்வாளர், ‘நீங்கள் ஒரு காட்டிற்குள் செல்கிறீர்கள்.
அப்போது ஒரு சிங்கம் எதிர்பாராத விதமாக விரட்டத்தொடங்குகிறது. என்ன செய்வீர்கள்?’
’அங்கிருந்து ஓடுவேன்’ – பதில்.
’சரி.. மலையின் மேல்நோக்கி ஓடுவீர்களா? அல்லது கீழ்நோக்கியா?’
‘கீழ் நோக்கித்தான் ஓடுவேன்’- மாணவரின் பதில்.
’சரி.. ஓடிக்கொண்டே இருந்த்தால் மிகவும் களைப்பாகி விடுகிறது. அப்போது என்ன செய்வீர்கள்?’
‘மரத்தின் மீது ஏறி விடுவேன்’ என்றதும்,
’மரத்திலேயா? அங்கே மரமே இல்லை என்றால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்க,
‘மரமே இல்லையென்றால் அது காடு அல்ல’ என்று சமயோசிதமாக பதிலளித்திருக்க வேண்டும்.
பொதுவாக தேர்வுக்குழுவில் இடம்பெறக்கூடிய அனைவருமே ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ், ஐ.ஆர்.எஸ் என இந்தியாவின் மூலை முடுக்குகளெல்லாம் பணியாற்றி, இந்தியாவின் நீள, அகலத்தை தங்கள் சேவையில் பழுத்த அனுபவம் கொண்டவர்களாக இருப்பர். உலகளவில் பணியாற்றியவர்களாகவும், பல்வேறு கலாச்சாரங்களைக் கண்டவர்களாகவும்,
குறிப்பாக அவர்கள் 60 வயதைக் கடந்தவர்களாகத்தான்
இருப்பர். அவர்களை ஏமாற்ற முடியுமா? அவர்களை ஈர்ப்பதற்குத்தான்
முயற்சிக்க வேண்டும். சிறந்த பதிலைக் கூறினால், அவர்கள் ரசித்து அனுபவிப்பார்கள்.
மிகவும் முக்கியமான விஷயம் என்னவெனில் அவர்களது ஈகோவை காயப்படுத்தக்கூடாது. வீட்டிலுள்ளவர்களின்
ஈகோவைக் காயப்படுத்தினால்
அவர்கள் தாங்கிக்கொள்வர்.
ஆனால், தேர்வுக்குழுவில்
இருப்பவர்கள் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். அவர்களைப் பார்த்து, ‘சார்.. நீங்கள் கேள்வியை தவறாக கேட்கிறீர்கள்’
என்று கூறக்கூடாது. தேர்வுக்குழுவில் இருப்போர் சிலர் கேள்வியை மூச்சைக்கட்டி மிக நீளமாக கேட்பார்கள். அவர்களுக்கு தெளிவான பதிலை சற்று விரிவாக்க்கூறாமல், ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என ஒற்றை வார்த்தையில் பதிலளித்தால்,
அவர்கள் ஏமாற்றம் அடைந்துவிடுவர். அவர்கள் ஏன் அவ்வாறு கேட்கிறார்கள்? வந்திருப்பவர்களின்
திறமையை வெளிக்கொண்டுவரவே
அவ்வாறு கேட்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு, அதற்குத்தக்கபடி
பதிலையும் சற்று நீளமாகத்தான் கூற வேண்டும். இவையெல்லாம் நேர்முகத்தேர்வின்போது, கேள்விகேட்கப்படும்
அந்த நிமிடத்தில் சமயோசிதமாக மேற்கொள்ளப்படவேண்டிய விஷயமாகும். இதெல்லாம் ஒரு நுட்பமா? என்றால் ‘ஆம். நுட்பங்கள்தான்’.
அந்த இடத்தில் சிறந்த புள்ளிகளைப்பெற வேண்டுமென்றால் இதை செய்துதான் ஆகவேண்டும். அங்கே நேர்மறையான அறிவுபலத்தை முழுமையாக பிரயோகம் செய்தாக வேண்டும். எதிர்மறையானவற்றை
தவிர்க்க வேண்டும். இதை அனைத்தையும் தெளிவாக, பதற்றமின்றி செய்தாலே போதும். வெற்றி நிச்சயம்.
----------------------------------------------------------------
No comments:
Post a Comment