முரண்பட்ட குறட்பாக்கள் (குறளின் குரல்-
11)
நம் அன்றாட வாழ்வில் “விதி, விதி வலியது” போன்ற வார்த்தைகளை கேட்பதுண்டு. இந்த ’’விதி” என்பதற்கு “மதி” என்பதன் எதிர்ப்பதமாக பயன்படுத்தி வருகிறோம். இது”நாம் நினைக்கக் கூடியது. நம்மால் யோசிக்கக்கூடியது. நம்மால் இயன்றது” என்று கூறலாம்.
விதி என்பது நமக்கு அப்பாற்பட்டது. இது கடவுளின் எதிர்மறை சக்தி (Negavtive Energy) போன்ற பொருளில் வழங்கப்படுகிறது.
திருக்குறளில் இரண்டு வித்தியாசமான குறட்பாக்கள் உள்ளன. திருக்குறளில் பெரும்பாலும் முரண்பாடுகள் (ContradictionS) இருக்காது. ஒரே எண்ணத்தை திருவள்ளுவர் நேர்த்தியாக கொண்டு சென்றிருப்பார். ஆனால் இங்கே ஒரு முரண்பாடு இருக்கிறது. அதை உங்கள் முன் ஒரு கேள்வியாக வைத்துவிட்டு,
அதற்கு ஏற்ற பதிலை அடுத்து நான் கூறுகிறேன்.
“ஊழ்”என்றால் “விதி”. திருக்குறளில்
“ஊழ்” 38 –ஆவது அதிகாரம். அந்த அதிகாரம் முழுமையிலும் ஊழ் என்பதைப்பற்றி பேசுகிறார். அதிகாரத்தின் இறுதியில் 10 ஆவது குறள்:
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். (குறள் - 380)
இதன் பொருள்:
இவ்வுலகத்தில் விதியைவிட மிகவும் வலிமையானது எது? வேறு எவையும் (மற்றொன்று சூழினுந்) அதனை (விதி)முந்திக்கொண்டு வந்தாலும், விதியானது அவை அனைத்தையும் பின்னுக்குத்தள்ளிவிட்டு தான் முன்னிலைக்கு வந்துவிடும். விதியின் உச்சபட்சமான சக்தி அது! மற்றொன்று என்பதில் கடவுள், மனிதர்களின் உழைப்பு, முயற்சி போன்ற அனைத்தும் அடங்கிவிடுகிறது.
மிகவும் சுவாரஸ்யமாக ”ஆள்வினையுடைமை” என்னும் அதிகாரத்தில் இறுதியில்,
”ஊழையும் உப்பக்கம் காண்பர்
உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.”
(குறள்- 620)
என்னும் குறள் இடம்பெறுகிறது.
அதாவது, ”எந்தவொரு மன உளைச்சலும் இல்லாமல் தன் முயற்சியில் தளராது தொடர்ந்து பணி செய்துகொண்டே இருப்பவர் விதியின் மறுபக்கத்தையே காணும் திறன்படைத்தவர் ஆவர்’ என்பதே இதன் பொருள்.
இதன்மூலம் ”ஊழிற் பெருவலி” எனத்தொடங்கும் குறளுக்கும், ”ஊழியும் உப்பக்கம்” எனத்தொடங்கும் குறளுக்கும் நிச்சயமாக முரண்பாடு உள்ளதை அறிகிறோம்.
மேலே கூறப்பட்ட இரண்டு குறட்பாக்களில் ஒரு குறளில் “விதி” அதிக சக்தி வாய்ந்தது என்றும், இன்னொரு குறளில் “மனிதனே அதிக சக்தி படைத்தவன்” என்றும் கூறுகிறார். ஆக திருவள்ளுவர் என்ன சொல்ல வருகிறார்? விதி எவ்வளவு பலமானது?
இது உண்மையில் முரண்பாடா? (Contradiction) பாராட்டா? (Compliment) ஒப்பீடா?
(comparison)
-------------------------------------------------
No comments:
Post a Comment